இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் – வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நடத்திய ஆய்வில் வளர்ந்த நாடுகளை போல பெண்களின் பாலின விகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

ஆயிரம் ஆண்களுக்கு ஆயிரத்து 20 பெண்கள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளை பற்றிய பார்வை மாறியிருப்பது இந்த அறிக்கை வாயிலாக தெரிகிறது. அதேபோல பெண்களுக்கான பொது சுகாதாரம் 48.5 சதவீதத்தில் இருந்து 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்கள் வீட்டிற்காக பயன்படுத்தும் எரிபொருள் 43 சதவீதத்திலிருந்து 58.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் வங்கியை கையாளும் திறன் 53 சதவீதத்திலிருந்து 78.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதர பாதுகாப்பு அமைப்பு முறைகள் 28.7 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய பெண்களின் சதவீதங்கள் நல்ல முறையில் உயர்ந்து வருகிறது. மகளிர் அணி தலைவராக இதை வரவேற்கிறேன்.

கோவை தெற்கு தொகுதியில் சாலை பராமரிப்பு பணி மோசமாக உள்ளது. அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் புதிய ஒப்பந்த பணி என்கின்றார்கள். கோவையின் அடிப்படை பிரச்சினைக்கு ஏற்ப அரசாங்கம் செயல்படவில்லை என்றும் அதிகாரிகள் ஒப்பந்தத்தை சொல்லி காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் கூறினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் போட்டி போட்டு மனு அளித்து வருகின்றனர்.

பெண்களுக்கு இண்டர்னல் கம்பிளைண்ட் கமிட்டி சரிபடவில்லை என்றால் சட்டரீதியாக சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.