பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள்‌ அச்சபடத் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவையில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அந்த இரு நோயாளிகளுக்கும் ஏற்பட்டுள்ள தொற்று, வீரியம் குறைவான இன்புளூயன்சா-ஏ வகை தான், பன்றிகாய்ச்சல் வகை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மாநகாட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, கோவையில் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மழைக்காலம் என்பதால் மாநகராட்சி பகுதியில் தினமும், 64 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் தனியார் மருத்துவமனையில், இரண்டு பேர் பன்றி காய்ச்சல் தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

மாவட்ட சுகாதார மருத்துவக்குழு, நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டதில், அந்த இரு நோயாளிகளுக்கும் ஏற்பட்டுள்ள தொற்று, வீரியம் குறைவான இன்புளூயன்சா-ஏ வகை தான், பன்றிகாய்ச்சல் வகை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

இன்புளூயன்சா தொற்று பதிவான இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அந்த பகுதிகளில் வேறு யாருக்கும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் பரவும் தொற்று நோய்களை தவிர்க்க, பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், அதிகம் பயன்படுத்தும் இடங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், வைட்டமின்-சி சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுதல் முதலிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுருந்தார்.