“சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்”

உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும் என்றும் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது கலைப்படைப்பின் மூலம் மட்டுமே சாத்தியம் என்று சூரியா கூறியுள்ளார்.

ஜெய்பீம் படத்தில் சமூக அக்கறை கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் தனது பாராட்டு கடிதத்தில் கலை நாயகன் சூரியாவின் தொழில் அறம் போற்றுதலுக்கு உரியது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- மதிப்பிற்குரிய தொல் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன. மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தாங்கள் குறிப்பிட்டதைப் போல, மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மன நிறைவை தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது கலைப்படைப்பின் மூலம் மட்டுமே சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி எனத் தெரிவித்துள்ளார்.