கோவையில் 7 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி: அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் அல்லது செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக கால் நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு 7 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கேரள பகுதிகளில் இருந்து கோமாரி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள முள்ளி, ஆனைகட்டி, மேல்பாவி, வேலன்தாவளம், வாளையாறு உள்ளிட்ட இடங்களை சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்கனவே கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளை கொண்டு 7 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பவர்கள் மழைக்காலங்களில் நோய் தொற்று வராமல் கவனமாக பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள புல்தரையில் மாடுகளை மேய விட கூடாது. மழை பெய்யும்போது மரத்தடியில் கட்டிப் போடக் கூடாது.” என்றார்.