கடல் வாழ் உயிரினங்களை காக்க புதிய முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய 2 கடற்கரையை கொண்ட நீண்ட கடல் எல்லையை கொண்டுள்ளது. மன்னார் வளைகுடா கடலில் கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, சித்தாமைகள், கடல் பாசி, மெல்லுடலிகள், பவளப்பாறைகள் என 3,600க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளன. சமீப காலமாக, இவ்விரு கடலிலும் பயணிக்கும் சரக்கு கப்பல்களில் இருந்து வெளியாகும் எண்ணெய் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதோடு கடல் வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் காரணமாக உள்ளது.

இக்கடற்பரப்பில் மீன்பிடியின்போது சேதமாகும் வலைகள், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், காலி மதுபாட்டில்கள் கடலில் வீசப்படுவதாலும் கடல் மேலும் மாசடைந்து வருகிறது. இதனால், கடலுக்கு அடியில் வாழும் லட்சக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

மீன்பிடியின் போது கடலில் வீசப்படும் கிழிந்த வலைகளில் சிக்கும் சித்தாமைகள் கடலில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது போன்ற செயல்களால் கடல் வாழ் உயிரினங்கள் இறப்பை தடுக்கம் விதமாக உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை மீனவ கிராமத்தில் உள்ள கடல் விளையாட்டு நிறுவனம் மீனவ குழந்தைகளின் உதவியுடன் கடற்கரையை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் ராமேஸ்வரம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு கடல் விளையாட்டுகள், ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை நேரடியாக அழைத்து சென்று காண்பித்தல், சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்தல் போன்றவற்றை செய்து வருகிறது.

கடற்கரையை தூய்மைப்படுத்தும் அளவிற்கு அந்நிறுவனத்திடம் ஆட்கள் இல்லாதால் கடல் விளையாட்டுகள் மீது ஆர்வமுள்ள கடலோரங்களில் வசிக்கும் மீனவ குழந்தைகளின் உதவியுடன் கடற்கரையை தூய்மைப்படுத்த திட்டமிட்டனர். மீனவ கிராம குழந்தைகள் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்கும் கடல் விளையாட்டுகளை கட்டணமின்றி கற்றுத்தரப்படும் என்ற செய்தியை அறிந்து மீனவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.

இதை பயன்படுத்தி பெற்றோரின் அனுமதியுடன் கடற்கரையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை குழந்தைகள் உதவியுடன் சேகரித்து வருகின்றனர். கடலில் விளையாட வரும் மீனவ குழந்தைகள் கையுறை அணிந்து கடற்கரை ஓரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக், வலைகள், காலி மது பாட்டில்கள் உள்பட கடலுக்கு மாசு தரும் பொருட்களை கடல் விளையாட்டு நிறுவன ஊழியர்களுடன் சேகரிக்கின்றனர்.

கழிவு பொருட்களை சேகரித்த பின், குழந்தைகளுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி பயிற்சியாளர்கள் மூலம் நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனர். நீரில் மிதத்தல், நீர் சறுக்கு, ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டுகள் குழந்தைகளுக்கு கட்டணமின்றி கற்று தருகின்றனர்.

இம்முயற்சியால் கடந்த காலங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கடல் உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SOURCE: தினகரன்