“வார இறுதி நாளில் டீ,பேக்கரி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்”

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் டீ, பேக்கரி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் மனு அளித்தனர்.

தமிழகத்தில் தினசரி அதிகம் கொரோனா பாதித்த மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆட்சியர், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள துணிக் கடைகள், நகை கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதித்துள்ளார்.

அனைத்து மால்களும், பூங்காக்களும் சனி, ஞாயிறுகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்று கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் மாணிக்கம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அத்தியவசிய கடைகளை போல் மக்களின் அன்றாட தேவையாக டீ,பேக்கரி கடை உள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இக்கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.