ராசி மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

கோவை ராசி மருத்துவமனை சார்பில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கென இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களுக்கான சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு தமிழகத்தில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கோவை ராசி மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவை புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று பெரியநாயக்கன் பாளையம் மனோகரன் அறக்கட்டளை வளாகத்தில், ராசி மருத்துவமனை தலைமை மருத்துவர் தீபா ஜெயராம் துவக்கி வைத்த இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தலைமை மருத்துவர் தீபா ஜெயராம் தெரிவித்தார்.