டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் தடுப்பூசியா?

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா மரபணு மாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக புதிய பரிமாணத்தில் உலகை மிரட்டி வருகிறது. டெல்டா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதோடு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கலாம் என்பதால் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றன.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ், “உலக நாடுகள் மக்களின் உயிரைப் பாதுகாக்கக் காட்டும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் தடுப்பூசி மொத்த உற்பத்தியில் ஏற்கெனவே மிக அதிகமான டோஸ்களைப் பயன்படுத்திவிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் அதிகமாக பயன்படுத்த நினைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பெரும்பாலான தடுப்பூசி அதிக வருவாய் ஈட்டும் நாடுகளுக்குச் செல்வதை மாற்றி, தடுப்பூசிகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

ஜெர்மனி அரசு வரும் செப்டம்பர் மாதம் முதல் தொற்றுக்கு வாய்ப்புள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடவிருப்பதாகத் தெரிவித்தது. இரண்டாவது டோஸ் முடிந்து மூன்று மாதங்கள் ஆனவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டது.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸோக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் தான், தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வைச் சீரமைக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.