தனிநிதி அறிக்கை குறித்து விவசாயிகளிடம் வேளாண் அமைச்சர் கருத்து கேட்பு

கோவை மண்டல விவசாயிகளுடன் வேளாண் துறைக்கு தனிநிதி அறிக்கை தயாரித்தல் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் கருத்துக்களை (28.07.2021) கேட்டறிந்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அமைச்சர் பன்னீர்செல்வம் மேற்கொண்டார். அப்போது, வேளாண் பல்கலையில் உள்ள நூற்றாண்டு கட்டிடத்தை பார்வையிட்டு மரக்கன்று நட்டு வைத்தார். இதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண்மைத் தொழில்நுட்பங்களை பார்வையிட்டார்.

பின்னர், 2021-2022ம் ஆண்டு வேளாண் தனிநிதி நிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் என பலர் பங்கேற்றனர். இதில், விவசாயிகள் நிதி நிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து, பல்கலைக்கழக பழத்தோட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் பயிர் வளர்ச்சியூக்கிகள் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் பற்றிய செயல் விளக்கத்தினை பார்வையிட்டார்.

இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குநர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை இயக்குநர் வள்ளலார், பல்கலை துணை வேந்தர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.