தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்ப பூங்கா – அமைச்சர் மனோ தங்கராஜ்

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டைடில் பார்க்கில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல கட்டிட பணிகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (21.07.2021)நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அமைச்சர் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கோவைக்கு வந்துள்ளேன். ரூ.114 கோடி மதிப்பீட்டில் கோவையில் இரண்டாவது எல்காட் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஆய்வு மேற்கொண்டு விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம் என்றார்.

மேலும், இந்த துறையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் வேலை வாய்ப்பை பெருக்க முக்கிய பங்கு வகிப்பதோடு இதன் மூலம் தமிழகத்தின் வருவாயை பெருக்கவும், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் முடிகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால் பின் தங்கியுள்ளோம் என்றும், அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டங்கள் வகுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் நீரஜ் மித்தல், ஆகியோர் உடனிருந்தனர்.