நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டது ஏன்?

சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் 1987 (திருத்தச் சட்டம்), 2002 -ன் படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொது பயன்பாட்டு சேவைகள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார். பொதுப்பயன்பாட்டு சேவைகளில் அனுபவம் உள்ள இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டிருப்பார்கள்.

பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய பிரச்சனைகள் (Pre-Litigation) இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த சட்டத்தின் படி பொது பயன்பாட்டு சேவைகள் எவ்வாறு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்பது குறித்தும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் நன்மைகள் பற்றியும் தேனி மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் விளக்குகிறார்.

பொது பயன்பாட்டு சேவைகள்:

1. விமானம், சாலை அல்லது நீர்வழிப் பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகள்.

2. அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை.

3. எந்தவொரு நிறுவனத்தினாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை.

4. பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு.

5. மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை.

6. காப்பீட்டு சேவைகள்.

7.கல்வி அல்லது கல்வி நிறுவனங்கள்.

8.வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை.

மேலும் மத்திய- மாநில அரசின் அறிவிப்பின் மூலம் அவ்வப்போது சேர்க்கப்படும் மற்ற சேவைகள் தொடர்பாகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் (பொதுப் பயன்பாட்டு சேவைகள்) வழக்கு தாக்கல் செய்வது மிகவும் சுலபம்.

பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்குகளை, பொது பயன்பாட்டு சேவைகளுக்கான நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர்/மாவட்ட நீதிபதி முன் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண காகிதத்தில் தாக்கல் செய்யலாம்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் நன்மைகள்:

1. வழக்குகளை விரைவாக முடிப்பது.

2.வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

3. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பாணைக்கு சமமானது.

4.நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு தாக்கல் செய்ய முடியாது.

5. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவு இறுதியானது.

கடுமையான நடைமுறைகள் இன்றி ஏழை-எளிய மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.