கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய கோவை திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்தது. கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை பகுதி மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.