வாட்ஸ்அப்பில் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவம் சார்ந்த தேவைக்கும் வாட்ஸ்அப்பில் 9342066888 என்ற எண்ணுக்கு முகவரியுடன் தகவல் அனுப்பினால் 2 மணி நேரத்தில் வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கொரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும், எஞ்சியவர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும், மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படுவோருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் செல்போனில் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு காலத்திலும் சேவைதொடரும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.