வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற  இருக்கும் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை

தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற இருக்கும் அரசு பணியாளர்கள் மற்றும் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை  இன்று (29.4.2021) நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஆனது மே2 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற இருக்கும் அரசு பணியாளர்கள், மையத்துக்குள் இருக்கக்கூடிய கட்சி முகவர்கள், காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அல்லது முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பணியாற்ற இருக்கக்கூடிய அரசு பணியாளர்கள், கட்சி முகவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையிலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லக்கூடிய அரசு பணியாளர்கள் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் இருந்தும் பணியாற்ற கூடிய அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.