வெட்டினாலும் விதைத்து விட்டு வெட்டிகொள் – இப்படிக்கு பூமி

இந்த உலகம் எப்பொழுது உருவானது என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள், இப்படிபட்ட பழமை வாய்ந்த இந்த உலகை இப்படி சீரளிப்பது தவறு என்று. 90 களில் பிறந்த குழந்தைகள் பார்த்த பல விஷயங்களை,  20 களில் பிறந்த குழந்தைகளால் பார்க்க முடிவதில்லை ஏன் ?

நமது கற்பனையில் உலகம் இப்படி தான் இருக்கும் என்ற ஒரு பதிவு இருக்கும். அதாவது விண்வெளியில் இருந்து பார்த்தால் உலகின் கண்டங்களின் வடிவங்களும், கடல்களும் அதன் நிறங்கள் தெளிவாக தெரியும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியை சுற்றி செயற்கை கோள்கள் தான் தெரிகிறது என்பதை நிரூபிக்கிறது சில புகைப்படங்கள்.

நாம் கண்ணில் பார்க்காத, நம்மை சுற்றி இருக்கும் விண்வெளியின் நிலையே இது என்றால், நம்மை சுற்றி இருக்கும் காடுகள், மலைகள், கடல்கள்  இதை விட மோசமான நிலையில் உள்ளன. அதிலும்  காடுகள் கால் வெட்டப்பட்டு ஊனமாய் நிற்கிறது. வானில் இருந்து பார்த்தால் பனிமூட்டமாய் அழகாக காட்சி தரும் காடுகள் கூட உற்று பார்த்தால் காட்டு தீயால் கருக்கலைப்பு செய்யப்பட்டு வருகிறது.

மலைகளும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கூறு போட்டு விற்கப்படுகிறது. பாறைகள் உடைத்து கட்டிடம் கட்டவும், பாறைகளை தூளாக்கி மண்ணாகவும் பயன்படுத்தப்படுகிறது. தலை நிமிர்ந்து பார்க்க வைத்த மலைகளை கூட இன்று தலை குனிந்து பார்க்கும் அளவிற்கு பள்ளங்களாக மாற்றப்பட்டது.

கடல்களும் இதிலிருந்து விதிவிலக்கல்ல. கூட்டம் கூட்டமாக துள்ளி குதிக்கும் மீன்கள் வலைகள் என்று நினைத்து பிளாஸ்டிக் பைகளில் சிக்கிக் கொள்கின்றன. வலைகளில் சிக்கினால் கூட மற்றவர்களுக்கு உணவாகலாம், பிளாஸ்டிக் பைகளில் சிக்கி யாருக்கும் பயனில்லாமல் பரிதவித்து மரணிக்கின்றன. சில மீன்கள் இதனை உணவென்று நினைத்து உண்ணுகிறது. அதனால் இதனை உண்ணும் மற்ற உயிரினங்களுக்கும்  ஆபத்து ஏற்படுகிறது, நாமும் அதில் அடங்குவோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது, ஆனால் இந்த உலகம் மட்டும் மனிதனால் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றப்பட்டு வருகின்றது. முந்தைய தலைமுறையினர் பார்த்ததை நாம் பார்க்கவில்லை, நாம் பார்த்ததை நம் சந்ததியினர் பார்க்க முடியாது. நம் சந்ததியினரை பாதுகாப்பது நம் கடமை அதை போலவே இந்த இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.

மரத்தை வெட்டிக்கொள், அதற்கு பதிலாக 5 மரங்களை நட்டு செல். எதை வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஆனால் இயற்கையை நீ வாங்க முடியாது.  பூமியில் நாம் உயிர் வாழ தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். அதை சுரண்ட வேண்டாம். அதனால் இயற்கை ஏற்படுத்தும்  காயங்கள் நம்மை பாதிக்கும்.

உலக பூமி தினமான இன்று பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் வெறும் சாதாரண நிகழ்வு அல்ல. இது இயற்கையின் சுழற்சியை மாற்றி அமைக்கிறது. இயற்கையை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் சீண்டி பார்க்கலாம். ஆனால், இயற்கை ஒரு முறை சீற்றம் கொண்டால் அதனை நம்மால் தாங்கமுடியாது. இயற்கையை சுரண்டுவதால் மட்டும் இந்தநிலை ஏற்படாது, அதனுடன் நம்மால் முடிந்த வரை சுற்றுச்  சூழலை மாசடைய வைத்துள்ளோம். அதுவும் நமது அழிவை நோக்கி நகர்த்த கூடிய மிக முக்கிய காரணியாகும்.

நகங்களை வெட்டும் நாம் விரல்களை வெட்டுவதில்லை. அதேபோல், கிளைகளை வெட்டிக்கொள், மரங்களை வெட்டதே. வெட்டினாலும் விதைத்து விட்டு வெட்டிகொள் – இப்படிக்கு பூமி.