கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கூட்டர் ஓட்டி பிரச்சாரம்

கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக தன்னார்வலர் ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கூட்டரை ஓட்டி இன்று (25.3.2021) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக தினமும் மக்களை சந்தித்து வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர்.

அதிமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ்.பி.வேலுமணிக்கு  ஆதரவாக பல்வேறு தரப்பினரும் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவையை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்ற தன்னார்வலர் அமைச்சருக்காக நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர் கண்ணை கட்டிக்கொண்டு தனது ஸ்கூட்டரில் பயணம் செய்து பொதுமக்களிடம் அமைச்சருக்காக  வாக்கு சேரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்:

எங்கள் தொகுதியில் அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் இருந்தது இந்த சாலை, ஆனால்  இப்போது கண்ணை கட்டிக்கொண்டு செல்லும் அளவுக்கு தரமாக சாலைவசதி உள்ளது. எனவே மனசாட்சியுடன் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். என்று கூறினார்.