கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் செயற்கோள் தயாரிக்க பயிற்சி பட்டறை

கோவை : செயற்கைகோள் தொழில்நுட்பத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 150 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் விதமாக பயிற்சி பட்டறை ஒன்றை அரசூரில் உள்ள கேபிஆர் இன்ஸ்டிடூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஹவுஸ் ஆப் கலாம், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குழுமம் ஆகியவை இணைந்து இன்று 21.1.2021 நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இக்கல்லூரி முதல்வரும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான அகிலா, ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆனந்த் மேகலிங்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், மார்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏகேஎஸ்.லீமா ரோஸ் மார்டின், இக்கல்லூரியின் தலைமை நிர்வாகி ஏ.எம்.நடராஜன், இஸ்ரோ – எஸ்எஸ்எல்வி விஞ்ஞானியும், திட்ட மேலாளரும், டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை ஆலோசகருமான கோகுல், ஸ்பேஸ் சோன் இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரி குமார், அப்துல் கலாமின் உறவினரும் மற்றும் ஹவுஸ் ஆப் கலாம் அமைப்பின் உறுப்பினருமான எஸ்.முகமது இஜாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை விளக்குவதும் மற்றும் கலாமின் கனவை நிறைவேற்றுவதுமே இந்த பயிற்சி பட்டறையின் முக்கிய நோக்கமாகும்.

‘டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஸ்பேஸ் ரிசர்ச் பேலோட் கியூப் சேலஞ்ச் 2021’ என்னும் இந்த நிகழ்ச்சியில் 1000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் 100 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 10 மாணவர்கள் இடம் பெற்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக நாடு முழுவதும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் உள்ள திறமைகளை வளர்ப்பதற்காகவும் 100 சிறிய செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக அவர்களின் அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதையும் இந்த பயிற்சி பட்டறை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவிடும் வகையில், மார்டின் குழுமம் இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவி வழங்கி உள்ளது. இதில் தயாரிக்கப்படும் சிறந்த சிறிய அளவிலான செயற்கை கோள்கள் ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விண்ணில் பலூன் மூலம் ஏவப்பட உள்ளன.

இந்த பயிற்சி பட்டறையில் சிறிய அளவிலான செயற்கைகோள்கள் தயாரிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவை குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் விவசாயம் (விதைகள் முளைத்தல்), அண்ட கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு, இயற்கை கலப்பு பொருட்கள், அதிர்வு, காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் மண்டலம் தொடர்பான பல்வேறு தரவுகளை நமக்கு வழங்கவிருக்கின்றன. இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், விமானத் தலைமையகம், தஞ்சாவூர் விமானப்படை தளம், சென்னை – இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றில் இருந்து முறையாக பெறப்பட்டுள்ளன. மேலும், இதற்கு தேவையான மற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான துவக்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு, வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு, இந்திய புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு ஆகியவை கண்காணிக்க இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.