கோவையில் 15 இடங்கள் விபத்து அபாயம் மிகுந்தவை – போக்குவரத்து துணை கமிஷனர் தகவல்

கோவை மாநகர் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறலை கண்காணிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கோவை மாநகரில் கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகள் எவை என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில் கோவை மாநகரில் 15 இடங்களில் விபத்து அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் பிளாக் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு விபத்துக்களை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

கோவையில் விபத்து பகுதிகளின் விபரம் : அவினாசி ரோடு, அண்ணா சிலை, பீளமேடு பகுதி, சித்ரா கேஎம்சிஎச் சிக்னல், கோல்ட்வின்ஸ், திருச்சி ரோடு வசந்தா மில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஜங்ஷன், சத்தி ரோடு, அம்மன்குளம் பேருந்து நிறுத்தம், கிளாசிக் டவர் சந்திப்பு, நஞ்சுண்டாபுரம் மேம்பால பகுதி, போத்தனூர் ரோடு சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதி சாய்பாபா காலனி அழகேசன் ரோடு உள்ளிட்ட 15 இடங்கள் பிளாக் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன எனவே அங்கு ஆய்வு செய்யப்பட்டு விபத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், கோவை முழுவதும் நடப்பாண்டில் விபத்து உயிரிழப்பு 53 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விபத்தில் 124 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 54 பேர் இறந்துள்ளனர். கோவை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு 350 பேர் 2018ல் 158 பேர் கடந்த ஆண்டு 132 பேர் விபத்தில் உயிரிழந்தனர் இதையடுத்து கோவை நகரில் விபத்து நடைபெறும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது அதில் 15 இடங்கள் பிளாக்ஸ் பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது வாகனத்தில் செல்லும் போது அந்த பகுதியில் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும் என்றார்.