திரையரங்கம் திறப்பு : பி.எஸ்.ஜி மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு காட்சி

தமிழகத்தில் இன்று (10.11.2020) திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில்  ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள பிவிஆர் சினிமா திரையரங்கில் கொரோனா காலத்தில் பணியாற்றிய பி.எஸ்.ஜி மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா தொற்றின் வீரியம் தமிழகத்தில் குறைந்து வரும் சூழலில் திரையரங்குகளை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, கோவையில் இன்று (10.11.2020) பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு காட்சியில் பிஎஸ்ஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு காட்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக திரையரங்குக்கு வந்த அவர்களுக்கு திரையரங்கு ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.