9 பேருக்கு மறுவாழ்வு அளித்த 17 வயது பள்ளி மாணவன்

கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் வயது 17. அவரது பெற்றோர்கள் கோபால் – விமலாதேவி அவர்களுடன் வசித்துவந்தார். இந்நிலையில் கடந்த வாரம் கோவில்பாளையத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இந்த நிலையில் கடந்த 06.11.2020-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தாய் தந்தையரால் முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் வைத்தீஸ்வரனின் உடல் உறுப்புகளை கே.எம்.சி.எச்.மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், உடல் உறுப்புகளை தானம் செய்ய வைத்தீஸ்வரன் உயிருடன் இருக்கும்போதே, நான் இறந்தபிறகு எனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவர்களின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ளோம் என்று கூறினார்கள்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அருண் பழனிச்சாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய வைத்தீஸ்வரன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.