வெங்காயத்தின் விலை இந்த மாதத்தில்தான் குறையும்? : வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

கோவை : ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்தான் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் அதுவரை விலை உயர்வு நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதாவது: கடந்த இருவாரங்களுக்குள் நாட்டின் வெங்காய விலை பெருமளவு உயர்ந்து நுகர்வோரை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. அதேபோல், தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயத்தின் விலையும் குறுகிய காலத்திற்குள் ஏறுமுகமாக காணப்படுகின்றது.

பெரிய வெங்காயம் விலை உயர்வுக்கான காரணம்: தற்போது பெய்து வரும் மழையால் மகாராஸ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம்  போன்ற மாநிலங்களில் உற்பத்தி முறையே 25, 70 மற்றும் 15 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் டிசம்பர் மத்தியில் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிரின் அறுவடையினால் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசின் குறித்த நேரத்தில் எடுக்கப்பட்ட வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடை காரணமாக இந்த விலையுயர்வு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம்  விலை உயர்வுக்கான காரணம்: சின்ன வெங்காயம் பெருமளவு தமிழகத்தில் பயிரிடப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போது, பயிர் செய்த 40 நாட்களில் வேர் அழுகல் நோயால் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. இந்நோய் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வெங்காயம் பயிரிடும் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அடுத்த 40 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தற்போதைய மொத்த இருப்பு 25 ஆயிரம் டன்களாகும். இது தமிழகத்தின் நாமக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தேனி, அரியலூர், பெரம்பலூர், துறையூர், மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது. மேலும், வெங்காய சாகுபடிக்கு பண்ணை இயந்திரங்களின் பங்கேற்பு சற்றும் இல்லாததால் பண்ணை தொழிலாளர்களையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த விலையுயர்வு டிசம்பர் மாதம்  இறுதிவரை நீடிக்கும். புதிய பயிரின் அறுவடைக்காலமாகிய ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறையும் என்றும் வர்த்தக மூலகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.