ஆழியாறு அணையிலிருந்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக  தண்ணீர் திறப்பு

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து இன்று (7.10.2020) விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தண்ணீரை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி மலர் தூவி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கென பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தினை கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக  செயல்படுத்தியதன் விளைவாக, நகரப்பகுதிகள், ஊரக பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தும் நீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘அ”  மண்டலத்தின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘அ” மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ” மண்டலம், வேட்டைக்காரன் புதூர் கால்வாய் ‘ஆ” மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘அ” மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ” மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 07.10.2020 முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2548 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம், கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்  தொகுப்பிலுள்ள ஆழியார் அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய் ‘அ” மண்டலத்தில் 11,616 ஏக்கர் பாசனப் பகுதிகளும், வேட்டைக்காரன்புதூர் கல்வாய் ‘ஆ” மண்டலத்தில் 5,623 ஏக்கர் பாசனப் பகுதிகளும், சேத்துமடைக் கால்வாய் ‘அ” மண்டலத்தில் 2,515 ஏக்கர் பாசனப் பகுதிகளும், ஆழியார் ஊட்டுக் கால்வாய் ‘அ” மண்டலத்தில் 2,362 ஏக்கர் பாசனப் பகுதிகளும் என மொத்தம் 22,116 ஏக்கர் பாசனப் பரப்புள்ள விவசாய நிலங்கள் பயனடையும். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்லைவர் ராசாமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, ஆனைமலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்திகார்த்திக், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.