ரூ.2 கோடிக்கும் மேலான வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.2 கோடியே 2 இலட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி  பூஜையினை சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று 22.09.2020 துவக்கிவைத்து, மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை துவக்கி வைத்தும், பாரதி நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பின்னர் அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகளை வழங்கினார்.

முதற்கட்டமாக தமிழ்நாடு நகர சாலை உள்கட்டமைப்பு நிதி (Turif Phase-II) திட்டத்திலிருந்து பாரதி நகர் பகுதியில் ரூ.34.71 இலட்சம் மதிப்பீட்டிலும், பிருந்தாவன் சர்க்கிள் தெற்கு பகுதியில் ரூ.41.30 இலட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையினை அமைச்சர் துவக்கி வைத்தார்கள்.

பின்னர், 93வது வார்டுக்குட்பட்ட திருநாவுக்கரசு நகர் பகுதியில் ரூ.46.47 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கும், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் மாச்சம்பாளையம் பிரதான சாலை மற்றும் நல்லவரத கோனார் வீதி பகுதிகளுக்கு மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர சாலை உள்கட்டமைப்பு நிதி (Turif) திட்டத்திலிருந்து மணிகண்டன் நகர் பகுதியில் ரூ.41.80 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினையும் ஆகமொத்தம் ரூ.2 கோடியே 2 இலட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை செய்து, ரூ.37 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவிப் பொறியாளார்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.