கொரோனா பாதிப்பு வீடுகளில் இனி தகர ஷீட் அமைக்கப்படாது!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தனி வீடுகள் இனி தகரம் மூலம் அடைக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை தகர ஷீட் கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது.

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவரின் குடும்பத்தினர் வெளியில் சுற்றித்திரிவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கையில் சிக்கல்கள் இருப்பதால், இனி தகர ஷீட் அமைக்கும் பணி இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இனி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனி வீடுகளில் வசித்தால், அவர்களின் வீடுகளை தகரம் கொண்டு மறைப்பதற்கு பதிலாக, ‘இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என சிவப்பு நிறத்திலான நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது. ஒரு தெருவில் 5 பேருக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டும் அந்த தெரு தகரம் கொண்டு அடைக்கப்படும்” என்றனர்.