கொரோனா அறிகுறிகளை வரிசை படுத்தும் அமெரிக்கா விஞ்ஞானிகள்

கொரோனா தொற்றாளர்களுக்கு ஏற்படும் முதல் அறிகுறியில் இருந்து, அடுத்தடுத்த அறிகுறிகளின் வரிசையை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகளையும், பிற அறிகுறிகளையும் குழப்பிக்கொள்ளும் மக்கள், கொரோனாவை ஆரம்பத்திலேயே கண்டறியாமல் மூச்சுத்திணறல் வரை சென்றபின் மருத்துவமனைக்கு செல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் பிற தீவிர நோய்கள் உள்ளவர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் அதிகமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனாவை போல உலகில் ஏற்கெனவே சார்ஸ் வைரஸ் பரவிய போதும் காய்ச்சல், இருமல் அதன் அறிகுறிகளாக இருந்தபோது, தங்களுக்கு பெருந்தொற்று வந்ததை கண்டறிவதில் மக்கள் சிரமமடைந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் கொரோனாவின் முதல் அறிகுறியில் இருந்து ஒவ்வொரு அறிகுறியாக வரிசைப்படுத்தி உள்ளனர், பெரும்பாலும் இந்த வரிசைப்படியே அறிகுறிகள் உண்டாவதாக கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, முதலில் காய்ச்சல் வர வாய்ப்புள்ளதாகவும் அதைத் தொடர்ந்து இருமல், தசை வலி, குமட்டல் அல்லது வாந்தியோ, இரண்டும் சேர்ந்தோ வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

அதன்பின் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் குறைந்தபட்ச தொற்றாளர்களுக்கு முதல் அறிகுறியே வயிற்றுப்போக்காக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சீனாவில் கடந்த பிப்ரவரி 16 முதல் 24ம் தேதி வரை கொரோனா உறுதியான 55,000 பேருக்கும், மற்றும் கடந்த ஆண்டு டிசம்பர் 11 முதல் 2020 ஜனவரி 29 வரை தொற்று உறுதியான 1100 பேருக்கும், ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 1994 முதல் 1998ம் ஆண்டு வரை 2470 பேருக்கு ஏற்பட்ட சாதாரண வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளை கொரோனா அறிகுறிகளுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டபோது, அவற்றின் அறிகுறி வரிசைகளில் மாற்றம் இருந்ததையும் கண்டறிந்தனர்.

இதன் மூலம் கொரோனா அறிகுறிகள் இந்த வரிசையில் தான் இருக்கும் என முடிவுக்கு வந்த ஆய்வாளர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விரைவான சிகிச்சையின் மூலம் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.