ஒரு வாரத்திற்கு கிராஸ்கட் சாலை கடைகள் அடைப்பு

கோவையின் முக்கியப் பகுதியான கிராஸ்கட் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் ஒரு வாரத்திற்கு முழு அடைப்பு செய்ய போவதாக கிராஸ்கட் சாலை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை, கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை நகரின் முக்கிய வணிக பகுதியாக உள்ள கிராஸ்கட் சாலையில் முக்கிய நிறுவனங்களின் ஜவுளி, நகை கடைகள், உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளையும் ஒரு வாரத்திற்கு முழு அடைப்பு செய்ய போவதாக கிராஸ்கட் சாலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராஸ் கட் சாலை மெர்ச்சண்ட்ஸ் அசோசியேசன் தலைவர் செந்தில் ரத்னா கூறுகையில், தற்போது கோவை நகரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், நலனை கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவிற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் உட்பட சுமார் 350 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடை அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். வணிக வளாகம் அதிகம் நிறைந்த, கிராஸ் கட் பகுதியில் கடந்த வாரம் பல கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில், இந்த கடையடைப்பிற்கு தாமாக மெர்சண்ட் அசோசியேசன் அமைப்பினர் முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.