1,6,9 வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் இன்று (17.8.2020) ஒன்றாம் வகுப்பு, 6 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நீடித்து வருவதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தேதியும் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் இன்று வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்கள் அதிக அளவில் கூடாமல் சமூக இடைவெளி விட்டு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு வழிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நீண்டநாட்களாக பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு இல்லாததால் காத்து இருந்த பெற்றோர்கள் இன்று காலை முதலே தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த வகுப்பினருக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.