கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக நூதன முறையில் எதிர்ப்பு – பாஜக இளைஞரணி

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை கண்டிக்கும் வகையில் கைகளில் வேல் வரைந்தும், பூக்களால் வேல் கோலம் வரைந்தும் நூதன முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்த கோவை பாஜக இளைஞரணி

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி இல்லம் முன்பு, அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பூக்களால் முருகனின் வேல் வரைந்தும், பெண்கள் தங்களது கைகளில் வேல் வரைந்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் முருகன் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடியும், வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டனர். மேலும் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி கூறுகையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டிக்கும் வகையில் பூக்களைக் கொண்டு வேல் வரைந்துள்ளதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மாநில இளைஞரணியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் வேல் வரைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.