நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக திரையரங்க ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேம்பாலம் அருகில் உள்ள சாரதா வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக நலிந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூபாய் ஐந்தாயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய ஊரடங்கு காலத்தால் திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் வேலையில்லாமல் தவித்து வரும் திரையரங்க ஊழியர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

சாந்தி திரையரங்க மேலாளர்கள் கார்த்தி மற்றும் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் 25 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை வழங்கப்பட்டது. பின்னர் கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர் சக்திவேல் உட்பட மாவட்ட, நகர பகுதி ஒன்றிய கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.