ஒரே நாளில் விதிகளை பின்பற்றாத 665 கடைகளுக்கு அபராதம்

கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படையினர் தினசரி களஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் பறக்கும் படை குழுவினர்கள் மூலம் நேற்று (06.07.2020) மாநகராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் மேற்கு மண்டலத்தில் 177 கடைகளில் ரூ.17,500, கிழக்கு மண்டலத்தில் 40 கடைகளில் ரூ.3,700, மத்திய மண்டலத்தில் 55 கடைகளில் ரூ.6,100, வடக்கு மண்டலத்தில் 141 கடைகளில் ரூ.14,200, தெற்கு மண்டலத்தில் 252 கடைகளில் ரூ.15,050, முகக்கவசங்கள் அணியாமலும், வருகைப் பதிவேடு பேணப்படாமலும், கிருமிநாசினி மருந்துகள் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளியினை பின்பற்றாமலும் இயங்கிய 665 கடைகளுக்கு பறக்கும் படை அதிகாரிகளால் மொத்தம் ரூ.56,550 (ரூபாய் ஐம்பத்து ஆறாயிரத்து  ஐநூற்று ஐம்பது) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்  ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.