குளியல் அறையில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு

கோவையில் வீடு ஒன்றின் குளியல் அறையில் பதுங்கியிருந்த கொடிய விஷமுடைய கண்ணாடிவிரியன் பாம்பு பிடிப்பவரால் மீட்கப்பட்ட நிலையில், பிடிபட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு சுமார் 35 குட்டிகள் வரை அந்தப் பாம்பு ஈன்று எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் வசித்து வரக்கூடியவர் மனோகரன். இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்ட அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு சென்ற முரளி குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு ஏற்கனவே தான் கொண்டு சென்றிருந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் விடுவதற்காக இருந்த போது பிடிபட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த முரளி அதே பகுதியில் ஒரு ஓரமாக அந்த பையை வைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு சுமார் 35 குட்டிகளை ஈன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் பாம்பினை குட்டிகளுடன் இன்று மாலைக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாகவும் இந்தியாவிலேயே மிக கொடிய விஷமுடைய பாம்பு வகையான இந்த கண்ணாடி விரியன் பாம்பு குட்டி போடும் இனத்தை சார்ந்தது என்றும் பாம்பினை பிடித்த முரளி தெரிவித்தார்.