வறுமையில் வைக்கோல் குதிரை விற்கும் வட மாநிலத் தொழிலாளி

சாலையோர மக்களை நம்பி, வைக்கோலினால் செய்யப்பட்ட  குதிரைகளை விற்பனை செய்து வருகின்றார் வடமாநிலத் தொழிலாளி.

பரபரப்பான கோவையில் சாலையோரங்களில் மண்பாண்ட விற்பனையாளர்கள், பழ விற்பனையாளர்கள், காய்கறிகள் விற்பனையாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள் போன்ற பல்வேறு சிறு, குறு தொழில் செய்பவர்கள் அதிகமாக கண்ணில் படுவது மேட்டுப்பாளையம் சாலையில்தான்.

மேட்டுப்பாளையம் சாலை வடமதுரை பகுதியில் வட மாநிலத் தொழிலாளர் ஒருவர் வைக்கோலை வைத்து விதவிதமான குதிரைகளை செய்து விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தார். கலைநயமிக்க குதிரையின் விற்பனைக் காட்சியினைக் கண்ட நமக்கு இந்த குதிரை, மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் வைக்கோலினால் செய்யப்பட்டது என்பதை நம்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தக் கலை குறித்து அவரிடமே கேட்டபோது துளியும் அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மொழி தெரியாத மாநிலத்தில், வயிற்றுப் பிழைப்புக்காக போராடி வருகின்றதை எண்ணும் போது, கொரோனா எனும் வைரஸ் எப்படி மக்களைப் புரட்டி போட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது. அவரிடம் நாம் முயற்சித்து பேசியதில், தான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் திருமணமாகி மனைவியுடன் பிழைப்புக்காக தமிழகம் வந்தாதவும் கூறினார்.

கோவை மாவட்டத்திற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததாகவும், எங்கேயும் சரியாக வாழ முடியாமல் தவித்து வந்ததாகவும், இந்த சாலையில் உள்ள உணவகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்ததாகவும்,  பொழுதுபோக்கிற்காக இது போன்ற குதிரைகளை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தான் இது போன்ற குதிரைகளை செய்தால் தனது மனைவி அதனை விற்பனை செய்து விடுவார் எனத் தெரிவித்தார்.

உணவகங்களில் உணவருந்த வருகின்ற வாடிக்கையாளர்கள், ரூ. 800 முதல் 1000வரை கொடுத்து இந்த குதிரைகளை வாங்கிச் செல்வார்கள் என்றார்.

இதனால், தினசரி வருமானம் ஏதோ ஒரு அளவிற்கு தங்களுக்கு போதுமான அளவாக இருந்ததாகவும், தற்பொது கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்மையினால் உணவின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளபட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் தற்போது இந்த குதிரைகளின் விற்பனையை மட்டுமே நம்பி இருப்பதாகக் கூறினார்.

மேலும், தற்போது வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ரூ. 300முதல் 500வரையே குதிரை பொம்மை விற்பனையாவதாகத் தெரிவித்தார். கட்டுப்படி ஆகாத விலை என்றாலும் குழந்தையின் பால், உணவுக்காக விற்பனையானால் போதும் என விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் பரவிய வைரஸ் தொற்றானது தொற்று  பாதிக்கப்பட்டவர்களைவிட, இது போன்ற அன்றாட தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுள்ளது என்பதை இவர்களைப் போன்றவர்களிடம் பேசும்போது புரிகின்றது.