இறைச்சிக்கு மாற்றாக உலக அளவில் பிரபலமாகி வரும் இந்தியப் பலாப்பழங்கள்!

கொரோனா ஊரடங்கினால் இந்திய பலாப்பழங்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் அடைக்கப்பட்ட இறைச்சி உணவுகளுக்குப் பதிலாக தற்போது பலாப் பழத்தின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறைச்சி உணவுகளுக்கு கடும் நெருக்கடி நிலவுகிறது. மேலும் ஒரு சிலருக்கு இறைச்சி உணவுகளின் மீதான நம்பிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ முதல் லண்டன் வரை பல பிரபல உணவகங்கள் சூப்பர் ஃபுட்டுக்கு (பன்றி இறைச்சிக்கு) பதிலாக பழுக்காத பலாப் பழங்களை பயன்படுத்தி வருகின்றன.

தெற்காசிய நாடுகளில் முக்கிய உணவுப் பொருளாகப் பலாப் பழங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதன் உற்பத்தியில் தென் இந்தியா சிறப்பான பங்கை வகிக்கிறது. குறிப்பாக கேரளா, பலாப் பழங்களின் உற்பத்தியில் முதல் இடத்தை வகித்து வருகிறது. கொரோனா நேரத்தில் தற்போது இந்தப் பழங்களுக்கான உள்ளூர் தேவை குறைவு என்றாலும் வெளிநாடுகளில் இதன் தேவை அதிகரித்து இருக்கிறது. இறைச்சி கடைகள் திறக்கப்படாத நிலையில் பல வெளிநாட்டு சமையல் காரர்கள் இறைச்சிப் போன்றே இருக்கும் இதன் சுவைக்காகப் பலாப் பழங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சர்வதேச அளவில் இதன் தேவை அதிகரித்து இருக்கிறது.

ஏழைகளின் உணவாகக் கருதப்படும் இந்த பழங்கள் ஆண்டுதோறும் டன் கணக்கில் வீணாக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் உள்ளூர் தேவைக்காக மட்டும் 100 மெட்ரிக் டன் தேவைப்படுவதாகவும் தரவுகள் சொல்கின்றன. இதைத் தவிர்த்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பலாப் பழங்களால் ஆண்டுதோறும் 19.8 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது. இதன் ஏற்றுமதியில் பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து நாடுகளிடம் கடுமையான போட்டிகளும் நிலவுகிறது. உலகம் முழுவதும் பலாப் பழங்களின் ஈடுபாட்டை தெரிந்து கொண்ட மைச்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஜேம்ஸ் ஜோசப் தனது வேலையை விட்டுவிட்டு தற்போது பலாப்பழ ஏற்றுமதியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

பல மேற்கத்திய நாடுகளில் பலாப் பழங்கள் அசைவ உணவு பிரியர்களையும் தற்போது சைவ உணவுக்கு மற்றி வருகிறது. பீட்சா, கேக், பழச்சாறுகள் எனப் பல உணவுகளில் இந்தப் பழங்கள் பயன்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் இந்தப் பழங்கள் பரிந்துரைக்கப் படுகிறது. கோதுமை, ரொட்டித் துண்டுகளை விட இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவில் பயனை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மற்ற பழங்களை போன்று உள்ளூரில் பலாப் பழங்கள் அதிகம் விரும்பப் பட்டாலும் அந்த பயன்பாட்டை விட தற்போது வெளிநாடுகளில் இதன் பயன்பாடு அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.