தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

கோடைகால வெப்பம் அதிகமாகத் தொடங்கிவிட்டதால் அனைத்து சாலைகளிலும், சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியத் தொடங்கிவிட்டன. வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழம் தர்பூசணிதான். விலை குறைவாகக் கிடைப்பதால் மக்கள் இதை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரும்பாலான பழங்களில் குறைகளோ அல்லது செயற்கையான வண்ணமோ இருந்தால் கடைக்காரர்களிடம் சுட்டிக்காட்டும்போது, “எங்களுக்கு என்ன தெரியும்” எனக் கையை விரிப்பார்கள். அதனால் நாம் முழுமையாக அதன் குறைகளைக் கண்டறிந்து வாங்க வேண்டியது நமது கடமையாகிறது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தன்மை இருக்கிறது, அதைத் தெரிந்தால் தரமான நல்ல பழங்களை பாரத்து வாங்கலாம்.

1. தர்பூசணியை முழுமையான பழமாக வாங்கும்போது சில நேரங்களில் அப்பழங்கள் காயாக இருக்க வாய்ப்புண்டு. காயை அறுத்த பின்னர் அது வீணாகிவிடும். அதனால் வாங்கும்போதே பழமாக வாங்குவதற்கு எளிய வழிகள் இருக்கின்றன. பொதுவாக மண்ணில் கொடியாகப் படரும் காய்கள் (சுரைக்காய், பூசணிக்காய்) தரைப் பகுதியில் இருக்கும். அந்தக் காய்களில் தரையில் உள்ள பாகம் மஞ்சள் வண்ணத்திற்கு மாறும். அதைப்போன்று தர்பூசணி பழமானது, நல்ல மஞ்சள் நிறத்தில் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றே பிசுபிசுப்புடன் இருக்கும். மாறாக, தரையில் இருக்கும் பகுதி வெண்மை நிறத்தில் இருந்தால் அது முழுமையாகப் பழுக்காத பழம் எனத் தெரிந்து கொள்ளலாம். ஆக, வெள்ளை வேண்டாம்.

2. தர்பூசணி பழத்தின்மேல் வலைப் பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், அந்தப் பழம் அடிபட்டிருப்பதாக நினைத்து பெரும்பாலானோர் தவிர்த்துவிடுவர். ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும். அதற்கு ஒரு காரணமும் உண்டு. தர்பூசணி பூவாக இருக்கும்போது அதில் தேன் எடுக்கும்பொருட்டு பல பூச்சிகளும், தேனீகளும் அணுகுவதால் அங்கே மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதனால், பூவின் இதழ்களில் தழும்புகள் ஏற்பட்டுவிடும். பூ, காயாகி, கனியானாலும்கூட அந்தத் தழும்புகள் வலைப்பின்னலாக மாறி பழத்தில் இருக்கும். இந்த வடுக்களைக் கொண்ட தர்பூசணி பழங்கள் அதிகமான சுவையுடன் இருக்கும்.

3. தர்பூசணி பழங்களில் ஆண், பெண் என இரு வகை இருக்கிறது. ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரிதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடனும் அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். இது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களையும் வாங்குகிறார்கள். நாம் வாங்கும் தர்பூசணிப் பழம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல் சராசரியான எடை கொண்ட பழமாகப் பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறுத் தேர்வு செய்யப்படும் பழம் அளவுக்கேற்ற எடையுடன் இருக்கிறதா எனவும் பார்த்து வாங்க வேண்டும். இத்தகைய பழங்களே அதிக இனிப்புடன் இருக்கும்.

4. தர்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்துவிட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகப் பழுப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது.

5. விவசாயிகளில் பெரும்பாலானோர் இரசாயன உரங்களை உபயோகித்தாலும், தர்பூசணி விவசாயிகள் கொஞ்சம் அதிகமாகவே இரசாயனப் புழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் நைட்ரேட் உரங்களை உபயோகிப்பதால், சுமார் 3 வாரங்களிலேயே பழங்கள் பெரியதாகி விடுகின்றன. இத்தகைய பழங்களை உண்பதால் நைட்ரேட் நச்சுகள் நமது உடலில் கலந்துவிடும். அதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. பழத்தை இரண்டாக வெட்டும்போது நடுப்பகுதி வெள்ளையாகவும், பழத்தின் தோல் பகுதிக்கும், பழத்திற்கும் இடையில் மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் அது நைட்ரேட் தாக்கம் அதிகமாக உள்ள தர்பூசணிப் பழம் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுதவிர பழங்களின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்தப் பழங்களில் நைட்ரேட் ‘ஊசி மூலம்’ செலுத்தப்பட்டிருக்கலாம்.

6. பழத்தை இரண்டாக வெட்டிப் பார்க்கும்போது நடுப்பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் இருந்ததால், அது வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட பழமாக இருக்கலாம். அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாகப் பழுத்த தர்பூசணி பழங்கள் கொஞ்சம் கசப்பு சுவையுடன் இருக்கும். வளர்ச்சி ஹார்மோன் செலுத்தப்பட்டதாக இருந்தால் அது உடலுக்குத் தீமையைக் கொடுக்கும். அதேபோல தர்பூசணிப் பழத்தின் ஒரு துண்டை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு வைக்கலாம். சிறிதுநேரம் கழித்து தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது அதிக இரசாயனம் ஏற்றப்பட்ட பழமாக இருக்கலாம். இது உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிப்பதாகும்.
தற்போதைய காலகட்டத்தில் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களும், இரசாயனம் கலக்காத காய்களும், பழங்களும் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் நுகர்வோராகிய நாம்தான் பொருளை வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடலுக்கு அதிகமான பலனைக் கொடுப்பதால்தான் கோடைக் காலங்களில் மக்கள் அதிகமாக தர்பூசணிப் பழங்களை வாங்குகின்றனர். அத்துடன், அதிகமாக கிராக்கி உள்ள பழங்களில் தர்பூசணிக்கும் முக்கிய இடம் உண்டு. அதனால், அதிகமாகப் புழங்கும் பொருட்களில் கலப்படமும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.