என்.ஜி.பி பள்ளியில் வணிகத் திருவிழா

காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி பள்ளியின் சார்பில் ‘என்.ஜி.பி வணிகத் திருவிழா – 2019′ பாவை அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவை கோவை மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
என்.ஜி.பி பள்ளியின் வணிகவியல் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். மாணவர்களிடையே அனுபவ வழிக் கற்றல், வணிகம் செய்து பொருளீட்டுதல், அனைவருடனும் பங்கிட்டு வாழ்தல் ஆகிய நற்பண்புகள் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. உணவுப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள், புத்தகங்கள் என 52ற்கும் மேற்பட்ட வணிக அங்காடிகள் இடம் பெற்றிருந்தன. மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இத்திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும், குழந்தைகளைக் கவரும் வண்ணம் விழாவில் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கின்ற வருவாய் மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கு வழங்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் டாக்டர் தவமணி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களின் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். மேலும், இவ்விழாவில் கோவை மருத்துவ மையத்தின் அறங்காவலர் டாக்டர் அருண். என். பழனிசாமி, என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட இயக்குநர் மதுரா வி.பழனிசாமி, என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் ஓ.டி. புவனேஸ்வரன், தலைமை நிர்வாக அதிகாரி நடேசன், பள்ளியின் முதல்வர் பிரீத்தா பிரகாஷ், பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.