அரசுப் பள்ளி மாணவர்களின் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரம்

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பிசிகேஜி அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் புதிதாக பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக குழந்தைகள் தினத்தில் இவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கவுள்ளனர்.

தற்பொழுது நாம் பயன்படுத்தும் ஈவிஎம் வாக்கு எந்திரத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நாளுக்குநாள் சந்தேகம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரங்களில் எந்திர முறைகேடு, கோளாறு போன்றவைகளால் வாக்குப்பதிவு தடைபடுகிறது, கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் வலுத்து வருகின்றன.

இதனை மாற்றும் வகையில் சென்னை, கோடம்ப்பாக்கத்தில் உள்ள அரசு மேனிலைப்பள்ளி மாணவர்கள் தனது கூட்டு முயற்சியில் புதிய பயோ மெட்ரிக் வாக்குப் பதிவு எந்திரம் ஒன்று கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகள் தினத்தன்று புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்தப் பள்ளி மாணவர்கள் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

பிரதீப் குமார், 12ம் வகுப்புப் படிக்கும் எம்.வி.ஜெபின், என்.சுதர்ஷன், சுஷில் ராஜ் சிங், ஏ.விஷால், ஆகியோர் இந்த புதிய வாக்கு எந்திரத்தை வடிவமைத்தவர்கள். 5 பேர் கொண்ட இந்த மாணவர் குழுவிலிருந்து சுதர்சன், சுஷில், விஷால் ஏற்கெனவே புதுடெல்லி பறந்து விட்டனர், இவர்கள் வியாழனன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்குக் காட்டப்படுவதற்காக நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட 200 மாணவர் திட்டங்களில் கோடம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் திட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 டீம்களில் இந்தப் பள்ளி டீமும் ஒன்று.

இந்த பயோமெட்ரிக் வாக்கு இயந்திரத்தின் இன்னொரு புதுமை என்னவெனில் வாக்காளர் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குத்தான் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரின் பயோமெட்ரிக் விவரங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதால் எந்த இயந்திரத்தின் மூலமும் வாக்குப்பதிவு மேற்கொள்ளலாம் என்கின்றனர் இந்த மாணவர்கள். அடுத்தக் கட்டம் என்னவென்பதை விவரித்த இந்த மாணவர்கள், “அடுத்தக் கட்டமாக மென்பொருள் ஒன்றை உருவாக்கி ஏடிம் இயந்திரங்கள் மூலம் மக்கள் தங்கள் பயோமெட்ரிக் பதிவு முறையிலோ, கண்விழித்திரைப் பதிவு முறையிலோ வாக்களிக்குமாறு செய்வதாகும். பயோமெட்ரிக் சரிபார்ப்பு இருப்பதால் கள்ள வோட்டுக்கள் போட முடியாது” என்றனர்.