4 நிமிடத்தில் 2 சப்பாத்தி செய்தால் – ரயில்வேயில் பணி

நான்கு நிமிடத்தில் இரண்டு சப்பாத்திகளை செய்ய முடிந்தால் அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் சமையலர் பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக திருச்சியில் நடைபெறும் போட்டித் தேர்வுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் வந்து குவிந்துள்ளனர்.

ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் (ஆன்சிலரி) என்று அழைக்கப்படும் இந்த பணியிடத்துக்கு சுமார் 35 சமையலர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இதற்காக 4000 இளைஞர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் உடற்தகுதித் தேர்வுகளை செகுந்தராபாத்தில் முடித்துவிட்டு, திருச்சியில் நடைபெறும் சமையல் போட்டித் தேர்வுக்காக வந்துள்ளனர்.

மாஸ்டர்செஃப் போன்ற ரியாலிட்டி ஷோக்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த சமையல் போட்டித் தேர்வு நடைபெறும். போட்டியாளர்களுக்கு கோதுமை மாவும், தண்ணீரும் வழங்கப்படும். அவர்கள் வெறும் 4 நிமிடத்தில் குறைந்தது இரண்டு சப்பாத்திகளை செய்து தர வேண்டும். இதில் வேகம் மட்டுமே முக்கியமல்ல, சப்பாத்திகளின் அளவு ஒன்று போல இருப்பது, சுவை அனைத்தும் சோதனை செய்யப்பட்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி செய்யப்படுவார். அடுத்த தேர்வு, கொடுக்கப்படும் அனைத்துக் காய்கறிகளையும்  10 நிமிடத்தில் நறுக்கித்தர வேண்டும்.

சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளைத் தயாரிக்கச் சொல்வதால், இந்த தேர்வில், தென்னிந்திய இளைஞர்களை விட வட இந்திய இளைஞர்களே அதிகம் தேர்ச்சி பெற வாய்ப்பிருப்பதாகவும், தென்னிந்திய உணவுகளைக் கொண்டு போட்டி நடத்தப்பட்டால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் கூறுகிறார்கள்.

நாங்கள் எப்போதாவதுதான் சப்பாத்தி செய்வோம். ஆனால் வட இந்திய இளைஞர்களோ தினமும் சப்பாத்திதான் சாப்பிடுவார்கள். செய்வார்கள். எனவே, அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கவலையோடு. அது மட்டுமா, கோதுமை மாவில் கொஞ்சம் தண்ணீர் அதிகமாக விட்டுவிட்டால் கூட எங்கள் கதை கோவிந்தாதான் என்கிறார்கள்.

ஆனால் இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றும், மேற்பார்வையாளர்கள் அனைத்தையும் கணக்கிட்டே மதிப்பெண் வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால், அடுத்த சுற்று சாம்பார், குழம்பு வைப்பது போன்ற தேர்வுகள் நடைபெறுமாம்.