பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுக்க அம்மா பட்ரோல் ரோந்து வாகனம்

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, அம்மா பட்ரோல் எனும் பெயரில் புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்டம் தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவின் தலைவராக ஏடிஜிபி ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் இந்த பிரிவே விசாரிக்கும் என காவல்துறை தெரிவித்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசு இணைந்து இந்த பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தில் உருவாக்கியுள்ளனர்.

இதில் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் எண் 1098, மற்றும் பெண்களுக்கான helpline எண் 1091 ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். முதற்கட்டமாக, சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையத்திற்கு 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட உள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனங்களை ஒப்படைக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் , அதேபோன்று வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள்ளது. யாரேனும் பெண்களை கேலி செய்தாலோ, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் செய்தாலோ, வாகனத்தில் உடனடியாக வந்து காவல் துறையினர் உதவுவார்கள்.

விரைவில் இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்கள் அனைத்திற்கும் ரோந்து வாகனங்கள் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.