டெங்கு காய்ச்சல்; ஜாக்கிரதை

உலகில் உள்ள பல கோடி உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. அது ஆறறிவு எனும் சிந்திக்கும் திறன் ஆகும். அந்த திறனால் மற்ற உயிரினங்களை அடக்கி ஆளுவது மனிதனின் குணங்களில் ஒன்று. நாய், பூனை, ஆடு, மாடு தொடங்கி, யானை, புலி போன்ற வனவிலங்குகள் வரை அனைத்தையும் தனக்கு அடிபணிய வைப்பது; கூடவே தனக்கான பணிகளை செய்ய வைப்பது என்பது பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், பல கொடிய வன விலங்குகளை எல்லாம் கொண்டு வந்து கூண்டுக்குள் அடைத்து விடும் மனிதன், ஒரு உயிரினத்தைக் கண்டால் மட்டும் தான் ஓடிப்போய் கூண்டுக்குள் ஒளிந்து கொள்வதுண்டு. ஆம். யானையைக் கூட பழக்கி, அதன் மேலே ஏறி அமரும் மனிதன், கொசுவை எதிர்கொள்ள முடியாமல் கொசு வலைக்குள் புகுந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பது தான் நிஜம்.

அதிலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்த மலேரியா தொடங்கி, இன்றைய டெங்கு காய்ச்சல் வரை எல்லா ஆட்கொல்லி நோய்களும் இந்த கொசு எனும் சின்னஞ்சிறு உயிரினம் மனிதனுக்கு வழங்கிய பரிசுகளாகும். வேப்பிலை புகை போடுவது தொடங்கி, கிரீம் பூசுவது, பூச்சி மருந்து அடிப்பது என்று என்னென்னவோ செய்தும் கொசு மட்டும் ஒழிந்த பாடில்லை. மாறாக, புதுப்புது வடிவங்களில் கொசுக்கள் பெருகிக்கொண்டே தான் இருக்கின்றன.

இன்று டெங்கு காய்ச்சல் தமிழகத்தை மிரட்டிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நாம் இந்த டெங்கு பரப்பும் கொசுவை என்ன செய்வது என்று தெரியாமல தவித்து தடுமாறிக்கொண்டு இருக்கிறோம். அரசாங்கம் தரும்டெங்கு பற்றிய புள்ளிவிவரங்கள் ஒருபுறம்; தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் மரணம் மறுபுறம்; காரணம் என்னவென்றே தெரியாமல் மர்ம காய்ச்சல் வந்து மரணம் என்று பல வகையிலும் டெங்கு காய்ச்சல் இங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தோ, மற்ற நோய்களைப்போல உறுதியாக பலன் தரக்கூடிய மருந்துகளோ இதுவரை இல்லை என்பது ஒரு வரலாற்றுச்சோகம்.

பட்டப்பகலில் ஒரு சின்னஞ்சிறு கொசு கடிப்பதால் மனித இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எனும் பிளேட்லெட்கள் அதிவேகமாக குறைந்து மரணத்தை எதிர்கொள்வது  என்பது எவ்வளவு கொடுமை? மனித உடலில் இரண்டு இலட்சத்துக்கும் மேல் இருக்கும் இந்த பிளேட்லெட்கள் படு வேகமாக குறைந்து கொண்டே வந்து முப்பதாயிரம், இருபதாயிரம், பத்தாயிரம் என்று தரைதட்டிவிடும். எந்த மருந்தும் இல்லை, எதிர்ப்பு சக்தியும் இல்லை என்ற நிலையில் ஈறுகளில் இரத்தக்கசிவு தொடங்கி, மூக்கு, வாயில் ரத்தம் வடியும்; பிறகு உள்ளுறுப்புகளிலும் இரத்தம் வடிந்து மரணம் சம்பவிக்கும் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. அதிலும் பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் இதற்கு முதல் பலி ஆகிறார்கள் என்பது இன்னமும் கொடுமை.

ஒரு குழந்தை என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் எவ்வளவு முக்கியம்? அதன் இழப்புதரும் வெற்றிடத்தையும், மன அழுத்தத்தையும் கணக்கிடமுடியுமா? இந்த சிக்கலையெல்லாம் உருவாக்குவது ஒரு சின்னஞ்சிறு கொசுதான். எங்கிருந்து வந்தது இந்த டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு?

ஆப்பிரிக்கக் காடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த கொசு உண்மையில் காடுகளில் உள்ள மரப்பொந்துகளிலும், காய்ந்து உதிரும் பெரிய இலைகள் மீதும் உயிர் வாழும் வகையைச் சேர்ந்தது. இன்று தண்ணீரில் முட்டையிடும் அளவு தன்னை தகவமைத்துக்கொண்டு விட்டது. அதிலும் இந்த வகை கொசு சாக்கடைத் தண்ணீரில் முட்டையிடாது.

நல்ல சுத்தமான, தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் முட்டையிடும். ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழும் இந்த டெங்கு கொசு தனது வாழ்நாளில் சுமார் ஆயிரம் முட்டைகளை இட்டு விட்டு நிம்மதியாக போய்ச்சேர்ந்து விடும். அதிலிருந்து வெளிவரும் கொசுக்கள் பல்கி பெருகிவிடும். அவைதான் இன்று பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் தலைவிரித்தாடுகின்றன.

நோய் பரப்பும் வைரஸைதனது உடலில் கொண்டு இருக்கும் இந்த கொசு ஒருவரைக்கடிக்கும்போது தனது உமிழ்நீர் மூலம் அந்த வைரஸை பரப்புகிறது. கூடவே,அதன் சந்ததிகளாக வரும் ஆயிரம் முட்டையிலும் இந்த வைரஸ் தாக்கம் இருக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு கொசுவும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் வல்லமை கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக இதன் முட்டைகள் ஓராண்டு கழித்தும்கூட கொசுக்களாக உருவெடுத்து பெருகும் தன்மை கொண்டதால் இதன் பெருக்கத்தையும், நோயையும் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ உலகம் திணறி வருகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதையும் இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் உடனே ஈடுபட வேண்டும்.

எவ்வளவோ சோதனைகளை கடந்து வந்துள்ள மனிதகுலம் இதனையும் வெல்லும்; அதுவரை டிவி சீரியல், கிரிக்கெட், செல்போன் கேம் போன்றவற்றில் நமது பொன்னான நேரத்தை செலுத்தும் கவனத்தில் ஒரு பகுதியை உயிர காக்கும் இதுபோன்ற நடவடிக்கையிலும் செலுத்துவோம். ஏனென்றால் இது நமது நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.

 

இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

எங்கெல்லாம் பயன்படுத்தாத பலநாள்பட்ட தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; தேவையற்ற டப்பாவோ, டயரோ, பாட்டிலோ, ஆட்டாங்கல்லோ, சிமெண்டு குழியோ அதை உடனடியாக அகற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பத்து நாட்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட்டில் பயன்படுத்தப்படாமல் அதில் தண்ணீர் நின்றால் கூட இந்த கொசு வந்து முட்டையிடும் வாய்ப்பு உள்ளது. வீட்டுக்கு அருகில் உள்ள காலி சைட்டில் உடைந்துகிடக்கும் காலி பாட்டிலில் தண்ணீர் தேங்கி நின்றால் அதிலும் முட்டையிடும். சரியாக பராமரிக்காத ரெப்ரிஜிரேட்டர், ஏர் கூலர் ஆகியவற்றில் உள்ள தண்ணீர் இதற்கு நல்ல இடம்.

கவனிப்பார் இல்லாமல் கசமுசாவென்று பயன்படுத்தாமல் கிடக்கும் தட்டுமுட்டு சாமான்களில் தண்ணீர் தேங்கி நின்றால் டெங்கு கொசு, சுகமாக குடி புகுந்து விடும். மற்றபடி, இது வீட்டுக்கு வெளியே நாறுகின்ற சாக்கடை நீரில் முட்டையிடாது.

அதுபோக, இரவு நேரத்தில் இந்த டெங்கு கொசு மனிதர்களைக் கடிக்காது. இந்த கொசுக்கள் ‘‘நைன் டு பைவ்’’ என்று பகலில் மட்டும் கடிக்கும் மாவீரர் பரம்பரையில் வந்தவை.

பல்வேறு விதமான காய்ச்சல்கள் வந்து பாடாய்ப்படுத்தும் இந்த நாட்களில் இந்த டெங்கு காய்ச்சலை எப்படி தனியாக இனம் காண்பது? நெற்றிப்பகுதியின் உட்புறத்தில் கடுமையான வலி, உடல்வலி, வயிற்று வலி, தலையின் பின்புறம் வலி, உடலில் சிவப்புத் தடிப்புகள்போன்றவை தான் இந்த காய்ச்சலின் அறிகுறிகள். அதுபோக 103முதல் 105 டிகிரி காய்ச்சல் தொடர்ந்து இருக்கும்.

இதில் எந்த அறிகுறி இருந்தாலும் உதாசீனப் படுத்தாமல் சரியான மருத்துவரிடம் உடனே செல்வது நல்லது. ஆன்லைனில் ஆன்டிபயாடிக் மருந்து வாங்கி உண்து, பப்பாளி இலை அரைத்து குடிப்பது என்று சுயமருத்துவம் பார்ப்பது ஆகியவை நல்லதல்ல.

கூடவே உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நேரடியாக சிகிச்சைக்கான மருந்துகள் இல்லை என்பதால் இளநீர், பழரசம் போன்றவற்றை பகல் நேரங்களிலும், கஞ்சி, சத்தான சூப் போன்றவற்றை காலை, மாலை நேரங்களிலும் தருவது மிக நல்லது. நோயின் தீவிரத்தை அறிய இரத்தத்தில் உள்ள தட்டணுக்களை பரிசோதிக்க உடனடியாக மருத்துவமனை செல்வது மிக அவசியம்.

இவை பகலில் கடிப்பவை என்பதால் இந்த கொசுக்கடி பாதிப்பு உள்ள இடங்களில் குழந்தைகளுக்கு உடலை மூடும்படியான ஆடைகள் அணிவிப்பது அவசியம். தொட்டில் முதற்கொண்டு கொசுவலை அவசியம். ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசுக்களை வராமல் செய்ய வேண்டும்.

வாடகை கொடுக்காமல் கொசுக்கள் குடியேறும் சாத்தியம் உள்ள எல்லா இடங்களையும் கண்காணித்து அழிக்க வேண்டும். தகுதிபெற்ற சித்த மருத்துவ டாக்டரின் ஆலோசனையின் பேரில், நிலவேம்பு குடிநீர், கஷாயம் அல்ல, நிலவேம்பு குடிநீர் பருகுவது நல்லது.

அத்துடன், பொதுமக்கள் தங்களை பெரிய பிரகஸ்பதிபோல நினைத்துக்கொண்டு இந்த சாக்கடையில் தான் டெங்கு கொசு இருக்கிறது என்று கதையள்ளி விடாமல், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வரும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

– ஆசிரியர் குழு.