டிக்கெட் கிடைக்காமல் புலம்பும் ரசிகர்கள்? சி.எஸ்.கே அணி நிர்வாகம் விளக்கம் ….

ஐ.பி.எல் திருவிழா நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே, ஆர்.சி.பி மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகினற்னர். இதற்கு காரணம் தான் என்ன? என்பதை தெரிந்துகொள்ளலாம்

ஐ.பி.எல். தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி என்பதால் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க இணையத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இதில் பெரும்பாலன ரசிகர்கள் டிக்கெட் வாங்க முயற்சித்த போதும் பலருக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை என்று வருந்துகினற்னர்.

டிக்கெட் கிடைப்பதில் உள்ள சிக்கல் குறித்து சி.எஸ்.கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கும் விளக்கம்  என்னவென்று பார்த்தால் “35,000 பார்வையாளர்கள் அமரக் கூடிய சேப்பாக்கம் மைதானத்தில், விற்பனைக்கு வரும் டிக்கெட்கள் எண்ணிக்கை வெறும் 12,000 முதல் 15,000 வரை மட்டும்தான். இதன் காரணமாகவே டிக்கெட்கள் பல ரசிகர்களுக்கு கிடைப்பதில்லை” என்பதுதான்.

இந்த இடத்தில் மற்ற இருக்கைகளுக்கான டிக்கெட்கள் என்னவாயிற்று என்ற கேள்வி எழத்தான் செய்யும். அண்ணா பெவிலியன், எம்.சி.சி. பெவிலியன் சேர்த்து 11 கேலரிகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில், எம்.சி.சி. பெவிலியனில் மெட்ராஸ் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோக ஐ.பி.எல். தொடரை பொறுத்தவரை ஒரு மைதானத்தில் 25 சதவீத டிக்கெட்கள் ஸ்பான்சர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு F,G,H ஆகிய 3 கேலரிகள் ஒதுக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி சென்னை அணியின் ஸ்பான்சர்கள், BCCI, TNCA ஆகியவைகளின் ஸ்பான்சர்களுக்கும் 20 சதவீத டிக்கெட்கள் ஒதுக்கப்படுகின்றன.

இதுபோக கிரிக்கெட் கிளப் அணிகள், அரசு அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இவை எல்லாம் சேர்த்து 20,000 முதல் 23,000 டிக்கெட்கள் விற்பனைக்கு வருவதில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுவும் ஒரு வகையில் கள்ளச்சந்தை விற்பனை என ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.