மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவர். அந்த வகையில், இந்த 2022-2023ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆகஸ்ட் 14ந் தேதிக்குள் பரிந்துரை செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தி உள்ளார்.

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், குற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்களையும் பரிந்துரை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.