கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவி மீது தாக்குதல்!

கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் சிவகாசியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குமாருக்கு சிவகாசியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாற 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.

இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே, அவர் கணவரை கண்டித்தார். ஆனால், அவர் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இளம்பெண் சிவகாசி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து குமார் தனது மனைவியுடன் கோவைக்கு வந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமாரின் கள்ளக்காதலி, கோவைக்கு வந்துள்ளார். பின்னர் குமாரை தொடர்பு கொண்டு அழைத்தார். 2 பேரும் சந்தித்து பேசினர்.

இந்த விவகாரம் குமாரின் மனைவிக்கு தெரியவரவே மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அப்பெண் தனது மாமனாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மகனுக்கு சாதகமாக பேசியுள்ளார்.

இதையடுத்து அப்பெண் இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், குமார் மற்றும் அவரது தந்தை பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து, இளம்பெண்ணின் கணவர் குமாரைக் கைது செய்தனர். இதற்கிடையே தனது மகனை, இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக குமாரின் தந்தை பரமசிவமும் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.