கோவையில் பெண் யானை உயிரிழப்பு!

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்நிலையில், ஆனைகட்டி பகுதியில் வன களப்பணியாளர்கள் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி மத்திய சுற்றுக்கு உட்பட்ட தூமனூர் பகுதியில் காப்பு காட்டிற்கு வெளியே, அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், திங்கட்கிழமை அன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வன கால்நடை மருத்துவரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானை உயிரிழந்த இடத்திற்கு அருகிலேயே மரம் ஒன்றும் வேருடன் முறிந்து விழுந்து உள்ளதால் எவ்வாறு யானை உயிரிழந்திருக்க கூடும் என பிரேத பரிசோதனையில் தெரியவரும்.