வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழியும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டு உள்ள நிலையில் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது . மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுதாரத் துறையும் துவங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் துவங்க உள்ளது. சராசரியை விட அதிகளவு மழை இருக்கும் என காலநிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிட்டு உள்ளது. வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் , பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் முன்னேற்பாடுகளை செய்து உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 15 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மழை காலங்களில் வரும் நோய் தாக்குதலை தடுக்க குடிநீர் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.