தமிழ்நாடு முழுவதும், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்

தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கியதையடுத்து, கோவையில் காலை முதலே மாணவ, மாணவிகள் அவர்களுக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்து சேர்ந்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திங்கட்கிழமை முதல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் துவங்கியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள், 11ம் வகுப்பில் தாம் சேர விரும்பும் பிரிவுகளை தேர்வு செய்து சேர்ந்து வருகின்றனர்.

மேலும் 10ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது 11ம் வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அவ்வாறு குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவர்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்ற பிரிவை பரிந்துரை செய்து வருகின்றனர்.