சீரான வாழ்க்கை…! சிறப்பான சிறுநீரகம்!

கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம்

சிறுநீரக பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் பக்தவத்சலம் அவர்கள் பேசியதாவது, உலக சுகாதார நிறுவனம், ஆரோக்கியமே செல்வம் (Health is Wealth) என்கிறது. ஆரோக்கியத்தை நான்காகப் பிரிக்கலாம். உடல் ஆரோக்கியம் (Physical Health), மன ஆரோக்கியம் (Emotional Health), அறிவுசார் ஆரோக்கியம் (Intellectual Health) (மூளை நன்றாக வேலை செய்ய வேண்டும்), சமூக ஆரோக்கியம் (Social Health) (நாம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, நம்மைச் சுற்றியிருக்கும் சமூகமும் நன்றாக இருக்க வேண்டும்), ஆன்மிக ஆரோக்கியம் (Spiritual Health). நம் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், நடக்காமலும் போகலாம். ஆனால் இறைவன் நினைப்பதுதான் நடக்கும். எனவே எதற்கும் நாம் கவலைப்படக் கூடாது.

வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் என்பதில் இருதயம் நன்றாக இருக்க வேண்டும், சுவாசக் கோளாறுகள் இல்லாமல் நுரையீரல் நன்றாக இருக்க வேண்டும், உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் அளவுக்கு வயிறு நன்றாக இருக்க வேண்டும், அதிலுள்ள சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வயிற்றின் இருபுறமும் இடுப்பு பக்கத்தில் உள்ள சிறுநீரகங்களில் வலியிருந்தால் கல் இருக்கலாம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால், பசியில்லாமல் விக்கல் ஏற்படுதல், இரத்தசோகை, முகம், கை, கால் வீக்கம், உடல் பெருத்தல், தினமும் 1.5 லிட்டர் போக வேண்டிய சிறுநீர் 100 மி.லி. என்று குறைந்த அளவில் வெளியேறுதல், ஒன்றிரண்டு நாளாக சிறுநீர் வெளியேறாமை, சிறுநீர் நன்றாக இருந்து, வெளியேறாமல் வயிறு உப்பிவிடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரகத்தில் தவறு இருக்கிறது என்று அர்த்தம். மேலும், சிறுநீரில் இரத்தம் வந்தால் சிறுநீரகப் புற்றுநோய் என்று அர்த்தம்.

யாருக்கெல்லாம் சிறுநீரகக் கோளாறு ஏற்படும் என்று கேட்டால், குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே வரலாம். அதாவது, 3, 6, 9 ஆகிய மாதங்களில் கருவாக இருக்குபோது அந்தக் குழந்தையின் அம்மாவுக்கு இரத்த அழுத்தம் (Blood Pressure) ஏற்படும்போது, அதற்குண்டான சரியான உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளைக் கொடுக்கவில்லை என்றாலும் அது குழந்தையின் சிறுநீரகத்தைப் பாதிக்கும். பிறந்த குழந்தைகளுக்கும் 24 அல்லது 48 மணி நேரம் சிறுநீர் வராமல் இருக்கும். இதனை சிறுநீரக மருத்துவர்கள் (Nephrologist) பரிசோதிக்கும்போதுதான், அது சிறுநீரகத்தில் உள்ள கடுமையான செயலிழப்பைக் காட்டும். அதேபோல், 90 வயது முதியவருக்கும் சிறுநீரக செயலிழப்பு வரலாம். ப்ரோஸ்டேட் பெரிதாகி இதே செயலிழப்பு வரலாம். சர்க்கரை நோய்க்கு எடுக்கும் மாத்திரைகளால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். பெரியவர்கள் முழங்கால் வலி, சர்க்கரை நோய்க்கு மருத்துவரை நாடாமல் மருந்துக்கடைகளில் சென்று தாங்களாக எடுத்துக்கொள்ளும் அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Anti-inflammatory drugs) தவறான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, NonSteroidal Anti-Inflammatory Drugs (NSAIDS) மருந்துகள், எய்ட்ஸ் (AIDS) மருந்துகளைவிட மோசமானது. இவை சிறுநீரக செயலிழப்பை கட்டாயம் உண்டாக்கும். இதனால் பின்னர் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியிருக்கும். வலிக்கு Dolo 650 பாதுகாப்பானது.

சிறுநீரக செயலிழப்பு குறித்து அறிந்தோம். இனி, சிறுநீரகம் நன்றாக இருக்கிறது என்பதை எப்படி அறியலாம் என்பது குறித்து பார்க்கலாம். ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் சிறுநீர் நன்றாக வெளியேறினால் மற்றும் சிறுநீர் போகும்போது எரிச்சல் இல்லை, நன்றாக பசிக்கிறது, நன்றாக தூக்கம் வருகிறது, பசிக்கும்போது விக்கல் இல்லை, இரத்தசோகை, வாந்தி இல்லை எனில் உங்கள் சிறுநீரகங்கள் நன்றாக இருக்கின்றன என்று அர்த்தம்.

நமது உடம்பில் ஓடும் 5 முதல் 6 லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கழிவுகளை வடிகட்டி, சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதுதான் இரண்டு சிறுநீரகங்களின் வேலையாகும். அதனால் கழிவுகள் நாற்றம் அடிக்கத்தானே செய்யும். வெளியேற்றப்படும் சிறுநீரில் யூரியா, யூரிக் அமிலம், கிரியாட்டினின் போன்ற முக்கிய நைட்ரஜன் கழிவுகள் இருக்கும். சிறுநீரகமும் (Kidney) கல்லிரலும் (Liver) முக்கிய கழிவுநீக்க உறுப்புகள். எனவே இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பைத் தடுப்பது எப்படி?

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட, 10 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். 150க்குமேல் சர்க்கரை அளவு போகக் கூடாது. HPA1C 6 அல்லது 7 க்குமேல் செல்லக் கூடாது. இரத்த அழுத்தம் என்பது சிறுநீரக செயலிழப்பிற்கு ஆரம்ப அறிகுறி. உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போதைய நாகரிக உலகம், மனித சமூகத்திற்கு அளித்த பரிசு.

நமது பெரியவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள், உழவுப் பணி செய்தார்கள், உண்டார்கள், நிம்மதியாக உறங்கினார்கள், விழாக்களில் மகிழ்ந்தார்கள், அவர்களுக்கு இரத்த அழுத்தம் இல்லை. காலம் செல்லச்செல்ல சாதாரண, அமைதியான வாழ்க்கை மாறிப்போய், கோபமான, துன்பமயமான வாழ்க்கையை தற்போது வாழ்கிறோம். பெரியவர்கள், சிறியவர்கள் என்றில்லாது எல்லோரும் ஒருவித பயம், பதட்டம், படபடப்பு, அவசரம் என வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த சமூகச் சூழ்நிலை, நமது உடலின் இயக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதனால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அவற்றில் சிறுநீரகச் செயலிழப்பு முக்கியமானதாகவும், நமது அமைதியான வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் இருக்கிறது.

சிறு வயதிலேயே செல்போன், விடியோ கேம், 12 வயதில் காதல், 14 வயதில் பாலுறவு, 16 வயதில் பிள்ளைப்பேறு என நாகரிகம் வெகுவேகமாக முன்னேறுகிறது. இவற்றைத் தவிர்க்க நாம் சில முக்கியமான வாழ்வியல் நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். முதலில், செல்போன் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் அல்லது செல்போன் பயன்பாட்டுக்கு என்று காலை 9 முதல் 5 மணி வரை என நேரம் ஒதுக்க வேண்டும்.  பின்னர் பெற்றோருடன் நேரம் செலவழிக்க வேண்டும். தவறான வாழ்க்கைக்கு வழிகாட்டும் திரைப்படங்களை ஒழிக்க வேண்டும். அடுத்தது முக்கியமாக மதுவை ஒழிக்க வேண்டும்.

ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். 140/90 என்றாலே பிரஷர் என்றுதான் அர்த்தம். உடல் பெருத்தவர்கள், உப்பு அதிகமாக எடுப்பவர்கள், அசைவ உணவு உண்பவர்கள், மது குடிப்பவர்கள் மற்றும் சிறுநீரகம் கெட்டுப்போனவர்களுக்கு இரத்த அழுத்தம் ஏற்படும். இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க சிறுநீரக மருத்துவரை மட்டுமே பார்க்க வேண்டும். அதுவே சரியான தீர்வாக இருக்கும்.

சிறுநீரகத்தில் தவறு இருந்தால் பிரஷர் வரும். பிரஷர் வந்தால் கிட்னி பாதிக்கப்படும். இவ்வளவுதான் விதிமுறை. இதற்கு சிறுநீரக சிறப்பு சிகிச்சை நிபுணர்தான் சிகிச்சை அளிக்கத் தகுதிவாய்ந்தவர. மற்ற டாக்டர்களைவிட இவர்களுக்கு இதன் பின்னணி, தகுந்த சிகிச்சை முறை குறித்துத் தெளிவாகத் தெரியும். இதற்கென்றே எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் நான்கு சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.

மருத்துவர்கள் ராமசாமி, கோபி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, சபரிநாதன் ஆகியோர் மருந்துகள் மூலம் சிறுநீரகத்திற்கு சிகிச்சை அளிப்பவர்கள். மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், திலக் ஆகியோர் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பவர்கள்.

முதியவர்களுக்கு ப்ரோஸ்டேட் (சுரப்பி) பெரிதாகி பிரச்னையை ஏற்படுத்தும். அதில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு முதுகு வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது மிகவும் மெதுவாக வெளியேறும். மூத்திரப்பையில் சிறுநீர் தேங்கி நிற்கும். இவற்றையெல்லாம் ஆராய்ந்து சரிப்படுத்துபவர்கள் சிறுநீரக மருத்துவர்கள் (Urologist).

நீரிழிவு அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்களுக்கும், சிறுநீரக செயல்பாட்டின் திறனுக்கும் சிகிச்சை அளிப்பவர்கள் நெஃப்ராலஜிஸ்ட். சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அடைப்பு போன்ற சிறுநீரகங்களால் ஏற்படக்கூடிய நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பவர்கள் யூரிலாஜிஸ்ட். இந்த இரண்டு வகை மருத்துவர்களும் எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் இருக்கின்றனர்  என்பது எங்கள் சிறப்பு.

பொதுவாக, மருத்துவத் துறையில் தவறான சிகிச்சை தரக் கூடாது. ஆனால் தவறான சிகிச்சை, தவறான மருந்து பரிந்துரைத்தல் இத்துறையில் அதிகம் நடைபெறுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. எங்கள் மருத்துவமனையைப் பொறுத்தவரை தவறுகள் நடக்க வாய்ப்புகள் கிடையாது. ஏனெனில், எங்கள் மருத்துவர்கள், நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். எங்களை நம்பி வருபவர்களின் உயிரைக் காப்பாற்றி தரமான சிகிச்சை அளிப்பதே எங்கள் முக்கிய நோக்கம் ஆகும்.

நீங்கள் ஒரு ஊருக்கு வாழச் செல்லும்போது, அங்கு குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடம், சந்தை, உணவகங்கள், காய்கறிக் கடைகள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்துத்தான் செல்ல வேண்டும். ஒரு நோய்க்கு எந்த மருத்துவமனை, மருத்துவர் சிறந்தவர் என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வியாதி வராமல் யாரும் இருக்க முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் என்ன நோய் வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன், நோய் வந்தால் யாரைப் பார்க்க வேண்டும் என்பது முன்னரே நமக்குத் தெரிய வேண்டும்.

இந்த கோவை மாநகரில் எங்கள் கே.ஜி. மருத்துவமனை அனைத்து நோய்களுக்கும் உலகத் தரமான சிகிச்சையை, குறைவான கட்டணத்தில் நிறைவாகத் தருவதில் சிறந்து விளங்குகிறேம் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். அதிலும், எங்கள் சிறுநீரக சிறப்புப் பிரிவு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

பொதுமக்கள் தங்கள் வீட்டில் இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி, குளுக்கோமீட்டர், சர்க்கரை நோய் கண்டறியும் கருவி போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். நமக்குத் தேவைப்படும்போது இவற்றைப் பயன்டுத்தி, உடல்நிலையைப் பரிசோதித்து அதற்கேற்றபடி வாழ்வியல் முறையை மாற்றிக்கொண்டால் மருத்துவமனைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை.

அதிலும் குறிப்பாக, நோய் முற்றிப்போய் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆரம்பத்திலேயே உங்கள் நோயைக் கட்டுப்படுத்தி பணத்தையும் ஆரோக்கியத்தையும் காத்திடலாம். சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிறுநீரக செயலிழப்பு வராது. நீங்கள் ஆரோக்கியமுடன் வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். என்றார்.

ஓர் அன்பான வேண்டுகோள்!

மதுபானக்கடைகளை நாடக்கூடாது என அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன். ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் மதுவினால் எத்தனையோ குடும்பங்கள் அழிந்து போகின்றன.

மது அருந்தி வாகன விபத்தில் தலையில் அடிபட்டுவரும் ஏராளமான குடிமகன்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். இவர்களது குடும்பம் கதறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. மருத்துவமனை வைத்திருக்கும் எனக்கு விபத்து, கல்லிரல், சிறுநீரகப் பாதிப்பு என சிகிச்சை செய்வதால் வருமானம் கிடைக்கிறது. ஆனால், அவர்களது குடும்பத்தின் கண்ணீரைப் பார்க்கும்போது மனதுக்கு பரிதாபமாக இருக்கிறது.

நீ வாழ.. நீர் அவசியம்…!’

டாக்டர் ராமசுவாமி சேதுராமன்

கே.ஜி. மருத்துவமனை சிறுநீரக சிகிச்சை சிறப்புப் பிரிவுத் தலைவர் டாக்டர் ராமசுவாமி சேதுராமன் கூறியதாவது, ‘இம்மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு நிபுணராக கடந்த 12 வருடமாக பணிபுரிகிறேன். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைப் பார்க்கிறோம். இங்கு சிறுநீரக பாதிப்பு நோய்களுக்கான சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கிட்னி பயாப்ஸி எனும் திசுக்களைப் பரிசோதிக்கும் முறை, டயாலிசிஸ், ஹோம் டயாலிசிஸ் எனப் பல்வேறு சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்கிறோம். பொதுவாக, சிறுநீரக பாதிப்பு என்றாலே மக்களுக்கு பயம், தவறான புரிதல் போன்றவை இருக்கின்றது. அவை அவசியமற்றவை. கிட்னி குறித்து பயப்படத் தேவையில்லை, சரியான சிகிச்சை, சரியான நேரத்தில் செய்தால் ஆரோக்கியம் காத்திடலாம்.

நுரையீரலுக்குக் கீழ், விலா எலும்புகளுக்கு அருகில் உள்ள இரண்டு சிறுநீரகங்கள், நமது உடம்பில் உள்ள நீரை சமமாக வைத்திருக்க உதவுகின்றன. இரத்த உற்பத்திக்கும், எலும்பு சத்துக்கும் முக்கியமானதாகவுள்ள சிறுநீரகங்கள், 90 சதவீதம் நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் செயலிழக்கின்றன.

வருமுன் காப்பது அறிவுடைமை என்ற அடிப்படையில் எல்லோரும், குறிப்பாக, இரத்த அழுத்தம், உடல் பருமன், இருதய பாதிப்பு, சர்க்கரை வியாதி, ஏற்கெனவே சிறுநீரகத்தில் சில பாதிப்புகள் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக இவர்கள் சிறுநீர், இரத்தம், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய எளிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

பரிசோதனை ஏன் அவசியம் எனில், தற்காலிக சிறுநீரக பாதிப்பு, நிரந்தர சிறுநீரக பாதிப்பு என்று இரண்டு வகை உள்ளது. நிரந்தர பாதிப்பு எனில் அதில் இருந்து மீள முடியாது, அதற்கான சிகிச்சை வாழ்நாள் முழுக்க நீடிக்கும். எனவே, சிறுநீரக செயலிழப்பின் இறுதிநிலை வரை செல்லாமல் உணவு முறை, மருந்துக் கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழப் பழக வேண்டும்.

பசியின்மை, சாப்பிட இயலாமை, நடந்தால் மூச்சு வாங்குதல், கால், வயிறு, முக வீக்கம், கண்ணுக்குக் கீழுள்ள வீக்கம் ஆகியவை தீவிர சிறுநீரக பாதிப்பின் சில அறிகுறிகள். வீக்கத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சிறுநீரக பாதிப்பும் முக்கியமான ஒன்று. மரபணு சார்ந்த சிறுநீரக பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம். எனவே, அவர்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். இந்தியாவில் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு அதிகம் உள்ளது.

இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும், அவை இரண்டிலுமே பாதிப்புகள் ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். நமக்கு ஒரு கிட்னி முறையாக இயங்கினாலே போதுமானது என்பதன் அடிப்படையில்தான் சிறுநீரக தானம் செய்யப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து மாசுக்களும் சிறுநீரகத்தின் வழியாகத்தான் சுத்தப்படுத்தப்பட்டு வெளியேறுகிறது. எனவே, உணவு முறை முக்கியமானது. அதிலும், உப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஒரு நாளைக்கு 5 முதல் 6 கிராம் அளவே உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நாம் தினசரி 10 முதல் 12 கிராம் அளவு எடுத்துக்கொள்கிறோம். நம் வீட்டில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சரியான அளவு உப்பு உள்ளது. ஆனால் நீங்கள் வெளியே உண்ணும் மதிப்பற்ற குப்பை உணவுகளில் (Junk Food) அதிக அளவு உப்பு உள்ளது. எனவே இவற்றைக் குறைத்துக்கொண்டாலே உப்பு அளவோடு உடலில் இருந்து சிறுநீரகத்தை பாதுகாக்கும். சிறுநீரகத்தைக் காப்பாற்ற, தினமும் காலையில் எழுந்தவுடன் 200 முதல் 400 மி.லி. வரை நீர் அருந்த வேண்டும். எனவே, நீங்கள் வாழவும், உங்கள் சிறுநீரகம் நன்றாக இயங்கவும் நீர் அருந்துங்கள்’ என்றார்.

ஒரு கிட்னியுடன் பிறக்கும் குழந்தையும் உண்டு’

டாக்டர் எஸ்.சபரிநாத்

கே.ஜி. மருத்துவமனை சிறுநீரக சிகிச்சை சிறப்புப் பிரிவு டாக்டர் சபரிநாத் அவர்கள் கூறியதாவது, ‘இம்மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு நிபுணராக (Nehprologist) 2017 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிகிறேன். பொதுவாக என்னிடம் மக்கள் கேட்கும் கேள்வி, யாருக்கு? எப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Renal Transplant) செய்வது என்பது குறித்துத்தான். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த பின்புதான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதற்கு முன் டயாலிசிஸ் என்பது இயந்திரத்தின் உதவியுடன் செய்யப்படும் இந்த முறையில் உணவுக் கட்டுப்பாடு, மருத்துவச் செலவு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வது, வாரத்திற்கு 2, 3 முறை மருத்துவமனைக்கு வருவது, தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

அதேநேரம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதால், சிறுநீரகம் செயல் இழந்த நபரின் வாழ்க்கை முறை மேம்படும். எப்படியெனில், அதிக மருந்து எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, மருத்துவமனைக்கு அடிக்கடி வரத் தேவையில்லை, புதிய சிறுநீரகம் இரத்த சுத்திகரிப்பை சீராக செய்துகொள்ளும், உணவு நன்றாக சாப்பிட முடியும், சிறுநீர் சீராகப் போகும். எனவே, டயாலிசிஸ் செய்வதைவிட, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு.

இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று, உயிருடன் உள்ள இரத்தம் சம்பந்தமுள்ள உறவினரிடம் இருந்து சிறுநீரகம் பெற்று பொருத்துவது (Living Donor); இரண்டு, மூளைச்சாவு ஏற்பட்டவரின் சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்துவது (Cadaveric Donor). இந்த இரண்டில் உறவினரிடம் இருந்து பெறக்கூடிய சிறுநீரக தானமே சிறந்தது.

டயாலிசிஸ் செய்வதால் ஒருவரின் ஆயுட்காலம், 5 முதல் 10 ஆண்டுகள் அதிகரிக்கும். அதேநேரம், சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொள்வதால் ஆயுட்காலம் 20 முதல் அதிகபட்சம் 60 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த பின்னர், 100க்கு 3 பேருக்கு நமது உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தி, புதிய சிறுநீரகத்தை ஏற்றுககொள்ளாமல் தவிர்க்கும். இதனை சரிசெய்ய முதலில் எதிர்ப்பு சக்தியை குறைக்க மருந்துகள் கொடுக்கப்படும்; பொதுவாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவர்கள், சாதாரண சளி, காய்ச்சல் வந்தாலே உடனே மருத்துவரை அணுக வேண்டும்; தொடர்ந்து 3 முதல் 5 பரிந்துரை மருந்துகளை முறையாக எடுக்க வேண்டும்; மாதம் ஒரு முறை, வருடத்திற்கு மூன்று முறை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்; ஒரு சிறுநீரகம் மாற்றியவுடன், அவருக்கு மீண்டும் சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புகள் உள்ளதால் அவர் இரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இரத்த சம்பந்தமுள்ள அப்பா, அம்மா, சகோதரி, மனைவி, குழந்தைகள் என யாருக்கெல்லாம் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லையோ அவர்களிடம் இருந்தும், முழு உடல் பரிசோதனை செய்தபிறகும், கொடுப்பவருக்கு கிட்னி தொந்தரவு வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்று தெரிந்தபின்புதான் சிறுநீரகத் தானம் பெறப்படும். சின்னத் தொந்தரவுகள் இருந்தாலும் அவரிடம் இருந்து கிட்னி தானம் பெற மேலும் பல பரிசோதனைகள் செய்யப்படும்.

கிட்னி தானம் கொடுத்தவர், எந்தக் குறைபாடும் இல்லாமல் ஒரு கிட்னியுடன் இயல்பான வாழ்க்கையைத் தொடரலாம். பிறக்கும்போதே 2000 அல்லது 5000 குழந்தைகளில் ஒரு கிட்னி இல்லாமல் அல்லது ஒரு கிட்னி செயல்படாமல் பிறக்கிறது. எனவே, தானம் கொடுப்பவர் எதற்கும் பயப்படத் தேவையில்லை. ஆனால் அவரும் முதல் மூன்று அல்லது ஆறு மாதங்கள் சிறுநீரக சிறப்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்’ என்றார்.

ஆரோக்கியம்… உங்கள் பொறுப்பு’

டாக்டர் டி.சக்கரவர்த்தி

கே.ஜி. மருத்துவமனையின் சிறுநீரக சிறப்பு மருத்துவர் சக்கரவர்த்தி பேசியதாவது, ‘தற்காலிக சிறுநீரக பாதிப்பு (Acute Kidney Injury) என்பது கடுமையான சிறுநீரக பாதிப்பாகும். பொதுவாக, ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் நன்றாக இருக்கிறதா என்று பரிசோதிக்கும்போது கிரியாட்டினின் என்ற உப்பு 1 அல்லது 1.2 க்குக் கீழ் இருக்க வேண்டும். இந்த அளவு, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு மாறுபடும். கர்ப்பிணிகளுக்கு 0.6 அல்லது 0.7 என்ற அளவு வேண்டும். இதற்கு மேல் சென்றால் சிறுநீரக பாதிப்பு. கிரியாட்டினின் 2 என்ற அளவு, கிட்னி 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக வேலை செய்தால்தான், சிறுநீரகம் தன் வேலையை சிறப்பாக செய்யும். உதாரணமாக, இருதயம் சரியாக வேலை செய்தால்தான், சிறுநீரகம் தன் வேலையை சிறப்பாக செய்யும். ஏனெனில், இருதயம், சிறுநீரகம் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்புடையவை. இருதய அடைப்பின்போது கொடுக்கப்படும் மருந்துகளை சீர்படுத்தி வெளியேற்றுவது சிறுநீரகம்தான். எனவே, சிறுநீரகம் சரியாக வேலை செய்வது மிக அவசியம். அப்படியில்லையெனில், அந்த மருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

பொதுவாக, புண்கள் ஏற்படுவதால், சிலர் தங்களது உடல் வலிகளுக்கு மருந்துக்கடைகளில் மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை எடுப்பதால், அந்த மருந்துகளின் மூலம் வரும் அழற்சி போன்றவை சிறுநீரகத்தை பாதிக்கும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், கிரியாட்டினின் பரிசோதனை, யூரினில் புரோட்டின் அளவு ஆகிய பரிசோதனைகளின் மூலம் சிறுநீரகப் பாதிப்பை அறியலாம்.

முதலில், கிட்னிக்கு இரத்தம் போகும் வழியில், அதாவது இருதயம், கல்லிரல், நுரையீரல்; இரண்டாவது கிட்னிக்கு உள்ளே உள்ள சவ்வுகள்: மூன்றாவது கிட்னியில் இருந்து வெளியே செல்லும் சிறுநீர். இந்த மூன்று வழிகளில் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகளை சரியான நேரத்தில், தகுந்த பரிசோதனை மூலம் சரியாகக் கணித்துவிட்டால் 90 சதவீத சிறுநீரக செயலிழப்பைத் தடுத்துவிடலாம். ஒரு இளைஞர் அதிகளவு வலி மாத்திரை எடுத்துக்கொண்டதால், அவருக்கு கிரியாட்டினின் அளவு 18 என்று இருந்தது. அவருக்கு கிட்னி பயாப்ஸி செய்து, பின்னர் 5 முறை டயாலிசிஸ் செய்த பின்பு, சாதாரண நிலைக்குத் திரும்பிவிட்டார்.

கிரியாட்டினின் அளவுக்கு அதிகமாகப் போகும்போது கை, கால் வீக்கம், சாப்பிட இயலாமை, வாந்தி ஏற்படுதல், மூச்சுவிட சிரமம் ஆகியவை ஏற்படும். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்ட பின்னர்தான் பெரும்பாலோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இது தவறான அணுகுமுறை.

சர்க்கரை, தைராய்டு, இருதய பாதிப்பு, இரத்த அழுத்தம் இருப்பவர்கள், முன்னரே சிறுநீரக பிரச்னைகளை இருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ‘எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும்’ என்ற கருத்தியலின்படி அவர்களின் உடல்நிலை சாதாரணமாக இருக்கிறதா என்று அறிய அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும். பொதுவாக, சிறுநீரகம் தன்னை சரிசெய்துகொள்ள 4 முதல் 12 வாரங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளும். அந்த நேரத்தில் நாம் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறப்பு. அதன்மூலம் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் தடுக்கலாம். பாதிப்பு உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும், பாதிப்பு இல்லாதவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறையும் பரிசோதனை செய்வது சிறப்பு’ என்றார்.

அலட்சியம், உயிரைக் குடிக்கும்’

டாக்டர் எம்.கோபிகிருஷ்ணன்

கே.ஜி. மருத்துவமனையின் சிறுநீரக சிறப்பு மருத்துவ ஆலோசகர் டாக்டர் கோபிகிருஷ்ணன் கூறியதாவது, ‘நிரந்தர சிறுநீரக பாதிப்பு (Chronicle Kidney Disease) என்பது சிறுநீரகத்தின் அமைப்பிலும், செயல்பாட்டிலும் மூன்று மாதங்களுக்குமேல் பாதிப்புகள் இருப்பதைக் குறிக்கும். இதனை ணிநிதி பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 100 க்கு 10 சதவீதம் மக்கள் ஏதோ ஒரு காரணத்தால் சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 10 இலட்சம் பேரில் 250 பேருக்கு நிரந்தர சிறுநீரகப் பாதிப்பு 15 சதவீதத்திற்குக் கீழ் உள்ளது. அதில், 10 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கிறார்கள். சிகிச்சை எடுக்கின்ற 30 முதல் 40 சதவீதம் பேர்தான் சிகிச்சையைத் தொடர்கிறார்கள். மீதமுள்ள 60 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளை ஏற்க முடியாமல் சிகிச்சையை விட்டுவிடுகிறார்கள். இதனால்தான் இந்தியாவில் நாளுக்குநாள் இந்த நிரந்தர சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கைக் கூடுகிறது.

டைப் 1 சர்க்கரை நோய் உள்ளவர்கள், 5 வருடத்திற்குப் பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை வியாதி எனத் தெரிந்தவுடனே சிறுநீரக பாதிப்பு உள்ளதா எனத் தெரிந்துகொள்வது சிறப்பு. சிறுநீரில் நுரை வருவது, கால் வீக்கம், மூச்சு வாங்குதல், இரத்த சோகை, சர்க்கரை அளவு தொடர்ந்து குறைதல், சர்க்கரை வியாதிக்காக எடுக்கும் இன்சுலின் அளவு குறைதல் போன்ற அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை பெற முன்வர வேண்டும்.

சிறுநீரக பாதிப்பு, இரத்த அழுத்தத்தைக் கூட்டும். எனவே, சரியான மருந்துகளை எடுத்துக்கொண்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பாதிப்பு எந்தவித அறிகுறிகளையும் ஆரம்பத்தில் தருவதில்லை. பெருமளவு பாதிப்பு வந்த பிறகே பிரச்னைகள் வெளியே தெரியவரும். எனவே, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக பாதிப்பு, அடிக்கடி சிறுநீரகக் கல் ஏற்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருதயக் கோளாறு, வலி மாத்திரை எடுப்பவர்கள், மாற்று மருத்துவ முறையில் போலி மாத்திரைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருமுறை சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.

சிறுநீரகம், தேவையில்லாத உப்புகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இரத்த உற்பத்தியை செய்கிறது, எலும்புச்சத்து கொடுத்து பணி செய்கிறது. இந்தநிலையில், சிறுநீரக பாதிப்பில் மூன்றாவது நிலையில் இரத்தசோகை ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு தகுந்த மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனத் தேவைப்படும் வழிமுறைகளைக் கூறி வழி நடத்த வேண்டும்.

தினசரி 2 கிராமுக்கும் குறைவாக உப்பு எடுத்தல், அதிகப்படியான கொழுப்புள்ள, குறிப்பாக மாமிச உணவுகளைத் தவிர்த்தல், உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுதல், முறையான உடற்பயிற்சி, தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான உடல் இயக்கம், நடைப்பயிற்சி, மருத்துவ ஆலோசானையின்றி வலி மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்த்தல் ஆகியவை நிரந்தர சிறுநீரக பாதிப்பைத் தடுக்கும் முறைகளாகும்’ என்றார்.

இப்படித்தான் வாழ வேண்டும்’

டாக்டர் என்.எம்.பாலகிருஷ்ணன்

கே.ஜி. மருத்துவமனையின் தலைமை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.எம்.பாலகிருஷ்ணன் கூறியதாவது, ‘இம் மருத்துவமனையில் 20 வருடமாகப் பணிபுரிகிறேன். சிறுநீரகப் பாதிப்புகளுக்கு 30 வருடங்களாக சிகிச்சை அளித்து வருகிறேன். 20,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். எங்கள் மருத்துவமனைக்குப் பொதுவாக சிறுநீரகக் கல், ப்ரோஸ்டேட், சிறுநீர் பாதிப்பு ஆகிய சிகிச்சைக்காகத்தான் அதிக நோயாளிகள் வருகின்றனர்.

ஆண்களுக்கு உள்ள ப்ரோஸ்டேட் என்பது உடம்பில் உள்ள சுரப்பி. இது, நீர்ப்பைக்கு அடியில், சிறுநீர் தாரையைச் சுற்றியுள்ளது. முக்கியமாக இது, இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. அதாவது குழந்தைப் பிறப்பிற்கான விந்து, இதிலிருந்துதான் வருகிறது. குறிப்பிட்ட வயதிற்குமேல் இதற்கான பணிகள் எதுவுமில்லை. இதனால் ப்ரோஸ்டேட் வளரலாம் அல்லது வளராமல் தொந்தரவு கொடுக்கலாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதுகு வலி இருந்தால் ப்ரோஸ்டேட் கேன்சர் வரலாம். அந்த வயதில் சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் ஏற்படும். தொடர்ச்சியாக சிறுநீர் வெளியேறாமல் விட்டுவிட்டுப் போதல், சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர் வருவதுபோன்ற உணர்வு, முக்கி முக்கி சிறுநீர் கழித்தல், சிறுநீரகக் கல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ப்ரோஸ்டேட் பாதிப்பு காரணமாக ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு போன்றவை இதற்கு காரணமாக உள்ளன. எனவே, இதற்குத் தகுந்த மருத்துவர்களின் மூலம் சிகிச்சை எடுத்தால் தீர்வுகள் உண்டு.

இதனைக் கண்டறிய முழு உடல் பரிசோதனைகள் போன்ற பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளன. தற்போது மருத்துவ சிகிச்சைகள் கத்தியின்றி இரத்தமின்றி நடக்க ஆரம்பித்துவிட்டன. அறுவை சிகிச்சைகள் நவீன முறையில் எளிதாகிவிட்டன. கிட்னி கேன்சரும் ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்கலாம். விதைப்பையில் (Testis) வரும் புற்றுநோயையும் நவீன மருத்துவ முறைகளால் தீர்க்கலாம். 20 வயதில்கூட இந்நோய் வரலாம். பொதுவாக, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் என்பது சாதாரணம். இதற்கு எளிய தீர்வு, சுய பரிசோதனை. அதாவது, நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உற்றுக் கவனித்து, அதற்கு சரியான மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

விதைப்பையில் ஏற்படும் வலியை அலட்சியம் செய்யக் கூடாது. ஏனெனில், இது ஒரு நோயாக மாறலாம். வலி ஏற்பட்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால், சரியான தீர்வு கிடைக்கும். அலட்சியம் கொண்டால், விதைப்பையில் உள்ள விரை ஒன்றை இழக்க வேண்டி வரும்.

அடுத்து, சிறுநீரகக் கல். இது தன்னைத் தானாகவே சரிப்படுத்திக்கொள்ளும் பாதிப்புதான் என்றாலும், இதன் காரணமாகவும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இதற்கு சரியான சிகிச்சை முறைகள் கே.ஜி. மருத்துவமனையில் இருக்கிறது. சிறுநீரகப் பாதிப்புள்ளவர்களுக்கு, சிறுநீரகக் கல் வந்தால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில், இதனால் தொற்று ஏற்படும் பாதிப்பு அதிகம்.

நவீன காலத்தில் வேலைக்குச் செல்பவர்கள் அவசர கதியில் ஓடுகின்றனர், தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுவது, சிறுநீர் அடிக்கடி கழிக்கவேண்டுமே என்பதற்காக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சரியான அளவில் நீர் அருந்தாமல் விட்டதே சிறுநீரகக் கல் வருவதற்குக் காரணம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்ட அளவிற்கு சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உடலுக்குத் தகுந்தாற்போல் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்.

புகைப்பிடிப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை சிறுநீர்ப்பை (Bladder) புற்றுநோய்க்கு காரணமாகும்.

வீட்டை, நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதைத் தவிர்த்து, இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ வேண்டும். பாரம்பரிய ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்’ என்றார்.

தண்ணீருக்கு மாற்று எதுவுமில்லை’

டாக்டர் திலக்

கே.ஜி. மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திலக் கூறியதாவது, ‘தற்போதைய வெப்பப் பருவ காலத்தில் சிறுநீரகக் கல் என்பது பொதுவான பாதிப்பாக உள்ளது. கல்லின் அளவைப் பொருத்து தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். கிட்னியில் இருந்து மூத்திரப்பைக்கு போகும் வழியில் கல் இருந்தால்தான், அறுவைசிகிச்சை தேவை. மற்றவர்களுக்கு சாதாரண சிகிச்சை போதும். உடனே கல் எடுக்க வேண்டுமா, இல்லை சிறிது காலம் கழித்து எடுக்கலாமா என்பது அந்தக் கல்லின் அளவைப் பொருத்து கால அவகாசம் கொடுக்கலாம். கல் பாதிப்பு இருந்தால், முதலில் பரிசோதனை, பின்னர் மருத்துவர் ஆலோசனை, அடுத்து என்ன சிகிச்சை எடுப்பது என்பதை முடிவு செய்ய நோயாளிக்கு உரிமை உண்டு. ஆனால், பயந்து வீட்டில் இருக்கக் கூடாது. அதனால் சிறுநீரகம் பெருமளவில் பாதிக்கப்படும்.

சிறு வயதில் சிறுநீரகக் கல் வரக் கூடாது. அப்படி வந்தால், அவர்களுக்கு வேறு ஏதேனும் ஒரு மறைந்திருக்கும் காரணம் (பாரம்பரியம் போன்ற) உண்டு. இங்கே, வயதும் சிறுநீரகக் கல் பிரச்னையில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கல்லின் அளவைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான், சிறுநீரகக் கல் திரும்பவும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

ஒரு தடவை சிறுநீரகக் கல் வந்தால் திரும்பவும் ஒரு வருடத்திற்குள் வருவதற்கு 10 சதவீத வாய்ப்புள்ளது. 5 வருடத்திற்குப் பிறகு 50 சதவீத வாய்ப்பு. கல்லால், வலி வரும்போது உடனே அல்ட்ராசவுண்ட் எடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வெப்ப காலத்தில் சிறுநீரகக் கல்லைத் தவிர்க்க, சரியான உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும், தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கக் கூடாது, சிறுநீரை அடக்கக் கூடாது, உடலுக்குத் தேவையான அளவு சுமார் 2 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். அதேபோல், சிறுநீர் வெளியேற்றமும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். இருதயத்திற்கு இரத்தத்தைப்போல், சிறுநீரகத்திற்கு நீர். சரியான அளவில் நீர் அருந்தாமல் இருந்தால், சிறுநீரில் இரத்தம் வரவும் வாய்ப்புள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வியல் சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் அருந்துவது நல்லது. உடலின் சமநிலை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்தவும் கூடாது. குளிர் நீரும் இல்லாமல், சுடுநீரும் இல்லாமல் வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். உடலுக்குத் தேவையான தண்ணீருக்கு மாற்று எதுவுமில்லை. எனவே, தேவையான அளவு நீர் எடுத்துக்கொள்வது சிறப்பு.

இரண்டு கிட்னிகளில் ஒன்று முற்றிலும் செயலற்றுப்போய், மற்றொன்றும் 80 சதவீதம் கெட்டுப்போய், 20 சதவீதம் இயங்கும்போதுதான் சில அறிகுறிகள் தெரியவரும். அதுவரை, நமது உடலில் எந்தவித மாற்றத்தையும் சிறுநீரகம் கொடுக்காது. அந்த நிலையில் உள்ளவர் எல்லோரையும் போன்று சாதாரண நிலையில்தான் இருப்பார்.

இது, இயற்கையின் அற்புத வடிவமைப்பு. மயக்கம், சிறுநீர் அளவு குறைதல், உடல் வீக்கம், தண்ணீர் அருந்தும் அளவு குறைதல் போன்றவை சிறுநீரக பாதிப்பின் முற்றிய நிலை அறிகுறிகள். எனவே, முன்னெச்சரிக்கை தேவை’ என்றார்.

இந்த செய்தியை Youtube-ல் பார்க்க : 

பகுதி 1 – https://youtu.be/7mQIFnPUWYQ

பகுதி 2 – https://youtu.be/3NmUHDUndjg