கோவையில் வெவ்வேறு இடங்களில் நகை திருட்டு: போலீசார் விசாரணை

கோவையில் வெவ்வேறு இடங்களில் ஐடி ஊழியர் உட்பட 2 பேர் வீடுகளில் நகை திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை குறிச்சி சிட்கோவை சேர்ந்தவர் சிவசண்முகம் (36). ஐடி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்தார்.

அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1 1/4 பவுன் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து சிவசண்முகம் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதேபோல், கோவைப்புதூரை சேர்ந்தவர் ஷியாமளா (61). இவர் வீட்டு பீரோவில் 2 1/4 பவுன் தங்க வளையலை வைத்திருந்தார். அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், அவர் தனது வீட்டில் வேலை பார்த்த பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.