கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை

கேரள மாநிலத்தில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, இன்று கோவையில் மலையாள
மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழக – கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின.

ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாருடன் இணைந்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், விஷூக் கனி படையலிட்டும், பல வகையான அறுசுவை உணவுகளை படைத்து கொண்டாடினர்.

கோவையில் ஓணம் பண்டிகையையொட்டி சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் இன்று காலை 5.15 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 1¼ டன் பூக்களால் சாமிக்கு அலங்காரம் மற்றும் அத்தப்பூ கோலமிடப்பட்டது.

சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பேர் கலந்து கொண்டு வழிப்பட்டனர். தொடர்ந்து ‘ஓணம் சத்தியா’ என்று அழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 1250 பேருக்கு 20 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

அதேபோன்று ராமநாதபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில், வடவள்ளியில் உள்ள முத்தப்பன் கோவில் உள்பட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.