6 பேருக்கு  மறுவாழ்வு அளித்த உதவி பேராசிரியர்

நாமக்கல் மாவட்டம், சின்ன முதலைப்படியில், கிழக்கு வீதியில் வசிக்கும் சுப்பிரமணியன் மற்றும் செல்வி, அவர்களின் மகன் பூவரசன் 27 வயது  இவர் கடந்த 12.08.18 தேதி அதிகாலை 12.10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது நாமக்கல் அருகில்  எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு  தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, கே.எம்.சி.ஹெச்   மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 13.08.18-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் செல்வி அவர்கள்   பூவரசன்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.  அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுநீரகம்  கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்  டாக்டர் பாரி விஜயராகவன் மற்றும்  டாக்டர் மகேஸ்வரன் பிச்சைமுத்து அவர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் N பழனிசாமி அவர்கள் கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய பூவரசன்  குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.