கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை : மழையால் 26 பேர் உயிரிழப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 26 பேர்   உயிரிழந்துள்ளனர்.கேரளாவின் இடுக்கி, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வெள்ள நீர் புகுந்ததது. மூணாறை அடுத்த அடிமாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே  குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடிக்கியில் உள்ள அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது . இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.  அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், பாலக்காடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கேரளாவில் கனமழை காரணமாக கன்னூர் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதற்கிடையே, கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.